கொலை வெறிக் கவிதைகள் 1754 - 1

ஜூன் 22, 2008 at 11:49 பிற்பகல் (நகைச்சுவை) (, , , , , , , )

உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போலவே
இயல்பாகிவிட்டது,
உன்னை நினைத்துக் கொள்வதும்…

நீ கேட்காமலே
பேருந்து நிறுத்தம் வரை
துணைக்கு வந்தது…

பத்திரமாய்
சென்று சேர்ந்தாயா என்று
தொலைபேசியில் சோதித்தது…

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில் நான்
மயங்கி விழுந்தது கண்டு
நீ பதறித் தவித்தது…

இரவுப் பணியில் ஒருநாள்
கால் இடறி
நடக்கமுடியாமல் போனதற்காக
எனக்கிருந்த பசியறிந்து
பழங்களுடன் நீ வந்தது…

தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது.

ப்ளாகரில் கொலை வெறிக் கவுஜை எழுதுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். வேர்ட் பிரஸ்சில் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்குக் கூட யாரும் இல்லை என்பதால் (சேவியர், உமா, போன்றோர் எழுதுவது கொலைவெறிக் கவிதைகளில் சேராது, அடித்துச் சொல்லுவேன்), அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதத் துவங்கியிருக்கிறேன்.

பின்னவீனத்துவம் பற்றி பலரும் பேசிக் கொண்டிருப்பதால், அதிலும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தலைப்பு வைப்பது பின்னவீனத்துவத்தின் அடையாளம் என்று சொன்னதால் ”கொலைவெறிக் கவிதைகள் 1754” என்று தலைப்பு கொடுத்துள்ளேன். 1431 பயோரியா பல்பொடி மாதிரி அது என்ன 1754 என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். 1754 ஐக் கூட்டினால் 8 வரும். 8 ராசியில்லாத எண் என்று பலராலும் சொல்லப் படுவதால் அந்த பப்ளிக் செண்டிமெண்ட்டை கட்டுடைக்க (கவனிக்க, இது ஒரு பின்னவீனத்துவ வார்த்தை) கூட்டுத் தொகை 8 வருவது போன்றதொரு எண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஒருவேளை என்னுடைய வாழ்நாளில் 1754 கவிதைகளை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று அவதானித்தபோது (இதுவும் பி.ந. வார்த்தை என்றார்கள்), அதை அடுத்து “கவிதைக் கட்டுடைப்பு அல்லது பின்னவீனத்துவக் கவிதைக் கலாட்டா 12347” என்ற தலைப்பில் இதே வேலையைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். 12347 ஐக் கூட்டினாலும் 8 வரும். ஒருவேளை 12347 கவிதைகள் எழுதித் தீர்த்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், பதினாறு இலக்கத்தில் கூட்டுத் தொகை 8 வருவது போன்ற ஒரு எண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் கட்டுடைப்பு தொடரும்.

இதற்கு இன்னொரு நோக்கமும் இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களின் மக்கள் தொகை குறைந்துவிடக் கூடாதே என்கிற சீரிய சிந்தனை தான் அது. அப்படி அவர்களுடைய மக்கள் தொகை குறைவதாகத் தோண்றினால் சாதரண மக்களை விளிம்பு நிலைக்குக் கொண்டு வரும் மகத்தான சேவையைச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டிருப்பது தான் இந்தக் கவிதைத் தொடர். விளிம்பு நிலை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் லதானந்த் அங்கிளின் பதிவைப் பார்க்கவும்.

நிரந்தர பந்தம் 15 மறுமொழிகள்

பல்லேலக்கா பல்லேலக்கா - II

ஜூன் 22, 2008 at 4:54 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , , , , , , , )

உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில். இன்றளவும் நான் பார்த்து வியக்கும் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்று. இந்த கோயிலின் கோபுரத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள் செவ்வக வடிவ அடித்தளத்துடன் உள்ள கோபுரங்களைக் கொண்டிருக்கும். இங்கே கோபுரத்தின் அடித்தளம் சதுர வடிவத்தில் இருக்கும்.

இது தஞ்சைக் கோயிலின் இரண்டாம் தோரண வாயில், முதலாம் தோரண வாயில் பிற்காலத்தில் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லாததால் அந்தப் படத்தைப் போடவில்லை.

தஞ்சை பெரியகோயிலின் மூண்றாம் தோரண வாயில்.

பெரியகோயிலின் வளர்ப்பு யானை வெள்ளையம்மா. இந்த யானையுடன் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்ட குந்தவை என்ற யானையும் வளர்ந்து வந்தது. உணவு ஒவ்வாமை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு குந்தவை யானை இறந்து போனது. என்னுடைய நண்பர்கள் சிலர் தோற்றத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கொண்டு வெள்ளையம்மாவை என்னுடைய அக்கா என்று கேலி செய்ததும் உண்டு.

இந்தச் சிலையில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு தகவல் ஒளிந்துள்ளது. சிலையின் வலது காலுக்குக் கீழே ஒரு முதலை இருக்கிறது. அதை ஒரு யானை துதிக்கையால் இழுக்கிறது. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்த பாம்பை இந்த வீரன் அடக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு யானையை விழுங்குகிற அளவுள்ள பெரிய பாம்பையே அடக்குகிறான் என்றால் அந்த வீரன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும்? அந்த வீரனின் இரண்டு கைகளையும் பாருங்கள். இடது பக்கம் மேலே உள்ள கை உள்ளே செல்ல வழி காட்டுகிறது. வலது புறம் மேலே உள்ள கை உள்ளே என்னை விடவும் பிரம்மாண்டமான ஒன்று இருக்கிறது என்று வியப்பைக் காட்டும் வகையில் உள்ளதையும் கவனியுங்கள். இந்தத் தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தனது உடையார் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய கோயிலின் பிரம்மாண்டமான நந்தி. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் மராத்தியர்கள் காலத்தில் வரையப்பட்ட தஞ்சை ஓவியங்கள். நந்திக்குப் பக்கத்தில் அபிஷேகம் செய்வதற்காக பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஏற்றி இறக்கக் கூடிய மேடை. கோயிலைக் கட்டியபோது நந்திக்கு மண்டபம் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் மராத்திய ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபம்தான் இது.

இது புதுச்சேரியில் உள்ள சுன்னாம்பாறு படகுத் துறை.

சுன்னாம்பாறு படகுத் துறையில் மரக் கிளைகளில் அமைக்கப்பட்டிருந்த மரவீடு.

தண்ணீரைக் கிழித்துக்கொண்டு கிளம்புகிறது படகு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தை வீட்டில் விளையாடிய பல்லாங்குழி. இக்கால குழந்தைகளில் எத்தனை பேர் இந்த விளையாட்டை அறிதிருப்பார்கள் என்று தெரியவில்லை.

சென்னை இளைஞர்களின் பாடல் பெற்ற ஸ்தலம், ஸ்பென்சர். இங்குதான் நான் இதற்கு முன்பு பணிபுரிந்த அலுவலகம் இருக்கிறது. சில நாள் எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தம் வரை செல்ல சோம்பல் பட்டு இந்த சிக்னலின் அருகிலேயே காத்திருந்து சிக்னலுக்கு நிற்கும் 21 அல்லது 27-D யில் வீட்டுக்குச் சென்றதுண்டு.

பெருகி ஓடும் கொள்ளிடம் (பொன்னியின் செல்வனில் படித்திருப்பீர்களே, அதே கொள்ளிடம் தான்). கைப்பிடிச் சுவரில் மாலை நேரக் காற்று வாங்கும் பெருசுகள். பேருந்தின் உள்ளிருந்து எடுத்தது.

கொள்ளிடம் பாலத்தில் கண்ட நடுவயதுக் காதல். இந்தக் காட்சியைப் பார்க்கும் போது வாலியின் ஒரு கவிதை ஞாபகம் வந்தது. “நாற்பதில் வரும் காதல் தோற்பதில்லை, முக்கியமாய் இனக் கவர்ச்சியை அது ஏற்பதில்லை”.

”ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” பாடிவிட்டு வந்த இந்த பயணத் தொடரில் இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது. விரைவில் அதுவும் வலையேறும்.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

எனக்கு மட்டும் ஏன் இப்படி - II

ஜூன் 17, 2008 at 1:41 நான் (நகைச்சுவை, பகுக்கப்படாதது) (, , , , , )

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்த ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.

விஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.

ஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.

ஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

நிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி - II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

இந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த பிரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

விவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

வி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது?

நிரந்தர பந்தம் 8 மறுமொழிகள்

பல்லேலக்கா பல்லேலக்கா - I

ஜூன் 9, 2008 at 12:35 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , )

பல்லேலக்கா என்ற தெலுங்குச் சொல்லுக்கு ”கிராமத்து மனிதன்” என்பதுதான் பொருள் என்று என் தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்னார். சொல்லப் போனால் நானும் ஒரு கிராமத்து மனிதன்தான். சென்னை நகரின் பரபரப்பு மிகுந்த திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் முதன்முதலாக கண்விழித்திருந்தாலும் இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்ததெல்லாம் தஞ்சாவூரில்தான். தஞ்சையின் நகரப் பகுதியில் வாழ்ந்தாலும் அன்றாடம் கிராமத்து மனிதர்களை தினந்தோறும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் நானும் ஒரு பல்லேலக்கா. இனி நான் சென்று வந்த பயணத்தைக் குறித்து…

மொத்த பயண தூரம்: 2,850 (பயணத்தில் சில ஊர்களைத் தவிர்த்துவிட்டதால் தூரம் கொஞ்சம் குறைந்துவிட்டது.)

சந்தித்த/உரையாடிய பதிவர்கள்: தோழர் மதிமாறன் அவர்களை மட்டும்தான் நேரில் சந்திக்க முடிந்தது. சென்னையிலேயே அதிககாலம் வாழ்ந்தாலும் இதுவரை “அம்பேத்கர் நினைவில்லம்” செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை மதிமாறன் அவர்களுடன் சென்று பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நான் வசித்த பட்டினப்பாக்கம் பகுதியில் ஒரு மணிநேரம் இணையத்தில் உலாவினோம். பின்னர் மெரீனா கடற்கரையில் சிறிது நேரம் உரையாடினோம். மழை குறுக்கிட்டதால் மிகவும் குறுகிய நேரத்திலேயெ சந்திப்பை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம். மூண்று மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது.

பின்னர் என் அன்பு மாமன் லதானந்த் அவர்களுடனும் திரு. சேவியர் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில் இருவரையும் சந்திக்க எண்ணியிருந்தபோதும் கடைசியில் அது முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.

வாங்கிய/சுட்ட/பரிசாக மற்றும் பண்டமாற்றில் பெற்ற புத்தகங்கள்: நல்ல புத்தகத்தை எங்கே பார்த்தாலும் அதை விட்டுவைக்கிற பழக்கம் எனக்கில்லை. முடிந்தால் அதை வைத்திருப்பவரிடம் கேட்டு வாங்கிவிடுவேன் இல்லையெனில் திருடிவிடுவேன். முதலில், வாங்கிய புத்தகங்களைப் பற்றி சொல்லுகிறேன். பாரதிய ஜனதா பார்ட்டி, வே. மதிமாறன் பதில்கள், சிரிப்பு டாக்டர் மற்றும் நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல”. முதல் இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு, அவற்றை எழுதிய திரு. மதிமாறனிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டதுதான் அந்த சிறப்பு. ”சிரிப்பு டாக்டர்” கலைவாணர் என்.எஸ். கிருஷ்னன் அவர்களைப் பற்றியது. இந்த புத்தகத்தை வாங்கியதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் இதை வாங்கியது தஞ்சாவூரில் உள்ள ஒரு வெற்றிலை பாக்குக் கடையில். ரூபாய் எழுபது மதிப்புள்ள இந்த புத்தகத்தை வெற்றிலை பாக்கு, மற்றும் சர்பத் விற்கும் ஒரு கடைகள் மூலமாகக் கூட விற்பனை செய்வது கிழக்கு பதிப்பகத்தின் நல்ல மார்கெட்டிங் உத்தி. ஊர் திரும்புவதற்காக சென்னை வந்த போது மயிலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் வாங்கியது நடிகர் சிவகுமாரின் ”இது ராஜபாட்டை அல்ல” புத்தகம்.

சுட்ட புத்தகங்களின் வரிசையில் முதலில் வருவது என் தந்தையாரின் கலெக்‌ஷனிலிருந்து சுட்ட ஷிவ் கேரா அவர்களின் “You Can Win” நூலின் தமிழாக்கம். என் அத்தையின் கலெக்‌ஷனிலிருந்து சுட்டது சோம. வள்ளியப்பன் அவர்களின் ”இட்லியாக இருங்கள்” புத்தகம்.

அடுத்து வருவது பரிசாகப் பெற்ற புத்தகங்கள். சென்னையில் என்னுடைய நண்பன் கார்த்தி இரண்டு புத்தகங்களைப் பரிசாகத் தந்தான். அந்த இரண்டு புத்தகங்களின் பெயரையும் சொன்னால் என் மரியாதை டோட்டல் டேமேஜாகிவிடும் என்பதால் அதனைத் தவிர்த்துவிடுகிறேன்.

தொடர்ந்து வருவது பண்டமாற்றாகப் பெற்ற புத்தகம். பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகத்தை என்னுடைய பயணத்தின்போதே முழுவதுமாக படித்து முடித்துவிட்டதால் என் அத்தையிடம் அதற்கு பண்டமாற்றாகப் பெற்றுக்கொண்டது திராவிடக் கழக வெளியீடான “அசல் மனுதரும சாஸ்திரம்”. 1919ல் வெளிவந்த நூலில் திரு கி. வீரமணி அவர்களின் ஆய்வுரையுடன் கூடிய மறுபதிப்பு அது.

புத்தகங்களைப் பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அல்லையன்ஸ் பதிப்பகத்தில் நான் வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் கிடைக்கவில்லை. துக்ளக் ஆசிரியர் சோவின் “யாருக்கும் வெட்கமில்லை” புத்தகத்தை ஐ.ஏ.எஸ். பாடத் திட்டத்தில் வைத்திருந்ததாகக் கேள்வி. அதில் அப்படி என்னதான் இருக்கிறது, வாங்கிப் பார்ப்போம் என்று நினைத்தேன். ஆனால் அந்த புத்தகம் ஸ்டாக் இல்லையாம். இன்னொன்று காண்டேகர் எழுதிய ஒரு நூல். பெயர் “க்ரௌஞ்ச வதம்” என்று நினைக்கிறேன். பல பிரபலங்கள் இந்த நூலைச் சிலாகித்துச் சொன்னதால் அதையும் வாங்கலாம் என்று நினைத்தேன். அதுவும் அங்கே கிடைக்கவில்லை.

சுற்றிய இடங்கள்: தஞ்சாவூருக்கு சென்று பெரிய கோயிலைப் பார்க்காமல் வரமுடியுமா? அங்கே சென்றதன் நினைவாக சில சிற்பங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். என்னை அழைத்துச் செல்வதாக சொன்ன நண்பன் அந்தி மசங்கிய பிறகு வந்து சேர்ந்ததால் சூரிய வெளிச்சம் போவதற்குள் சில படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் அங்கே விற்பனைக்கு வைத்திருந்த சில படங்களை வாங்கி வந்துள்ளேன்.

பாண்டிச்சேரியில் என் இரண்டு அத்தைகளின் குடும்பத்துடன் ”சுன்னாம்பாறு” கழிமுகத்துக்கும் சென்று வந்தேன். போய் வந்ததில் நான் கற்றுக் கொண்ட ஒரு பாடம், இது போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்பதுதான். ஏன் சொல்லுகிறேன் என்று பலருக்கும் புரிந்திருக்கும்.

மேற்சொன்ன இரு இடங்களிலும் எடுத்த படங்களை பல்லேலக்கா பல்லேலக்கா - II ல் பதிப்பிக்கிறேன். அதுவரை பொறுமை காக்கவும்.

கடைசியாக ஊர் திரும்புமுன் மூண்று மணிநேரம் நான் வசித்த மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் பகுதிகளில் சுற்றினேன். சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இடங்களுக்கு சென்று வருவதென்றால் யாருக்குத்தான் கசக்கும்.

நதிகள்: எங்கள் ஊர் ஆறுகளுக்கு ஜூன் மாதம் என்பது திருவிழாக் காலம். ஜூன் 12ல் ஆண்டு தோறும் மேட்டூர் அணை திறக்கப் படும். 12ம் தேதியே திறக்கப் பட்டாலும் கடைமடைக்குப் பக்கத்தில் உள்ள எங்கள் ஊருக்கு தண்ணீர் வந்து சேர 16 தேதி ஆகிவிடும். 15ம் தேதியே நான் புறப்பட்டுவிட்டதால் நிறை பெருக்காக எங்கள் ஆறுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் பயணங்களின் போது கொள்ளிடத்தில் மற்ற ஆறுகளிலும் இரு கரையையும் தொட்டுத் தண்ணீர் ஓடியது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.

கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்த மற்ற சமாச்சாரங்களையும் புகைப்படங்களையும் இதன் தொடர்ச்சியில் பதிப்பிக்கிறேன். இப்போதைக்கு அப்பீட்டு, அடுத்த பாகத்தில ரிப்பீட்டு. வரட்டுமா….

நிரந்தர பந்தம் 11 மறுமொழிகள்

நெடும் பயணம்…

மே 30, 2008 at 3:35 பிற்பகல் (பகுக்கப்படாதது)

அன்பானவர்களே,

வணக்கம். ஏறக் குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்வதால் அடுத்த பதினைந்து நாட்களில் சில தாமதங்களை எதிர்பார்க்கலாம். கிட்டத் தட்ட மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் என்பதால் எங்கெங்கே இணைய வசதி கிடைக்கும் என்று சொல்ல இயலாது. தங்களுடைய மறுமொழிகள் நீண்ட நேரம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கலாம். இதுபோன்ற வசதிக்குறைவுகளை அருள் கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

எழுத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு பயணம் எப்போதும் சுகமானதாகவே இருக்கும். எனக்கும் அப்படித்தான். வரும்போது கை நிறைய அள்ளி வருவேன், உங்களோடு பகிர்ந்து கொள்ள. என் தஞ்சை மாவட்டத்தின் சுவையான சம்பவங்களுடனும், புகைப்படங்களுடனும் விரைவில் உங்களை சந்திக்க உள்ளேன். போய் வருகிறேன்.

மீண்டும் ஒருமுறை அசௌகரியங்களுக்காக முன்கூட்டியே வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,

விஜய்கோபால்சாமி.

நிரந்தர பந்தம் 1 மறுமொழி

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்…

மே 28, 2008 at 5:27 பிற்பகல் (நகைச்சுவை, பகுக்கப்படாதது) (, , , , )

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்...

அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் விஜய் மல்லையா. என்னுடைய அணி ஐ.பி.எல். போட்டிகளில் படு மோசமாகத் தோற்றுவிட்டது. அவர்களை நம்பி நான் செய்திருந்த 400 கோடி ரூபாய் முதலீடு முழுவதுமாக நஷ்டமாகிவிட்டது. இந்த 400 கோடி ரூபாய் நஷ்டத்தால் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த நான் நடுத்தெருவுக்கு வரும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன்.

இந்தப் பதிவைப் படிக்கிற நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்கள் நினைத்தால் எனக்கு உதவ முடியும். பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். காபி மற்றும் தேநீருக்குப் பதிலாக என்னுடைய நிறுவனம் தயாரிக்கிற ”கிங் ஃபிஷர்” பியர் அருந்துங்கள்.

இதை என்னுடைய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மட்டும் சொல்லவில்லை, “கிங் ஃபிஷர்” பியர் உங்களுக்கு உற்சாகத்தையும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும். உங்களுக்கு இதயம் இருந்தால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். இந்த பதிவை உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மட்டும்தான் தவறு. குடித்துவிட்டு தாராளமாக வேலை செய்யலாம்.

அன்புடன்,

விஜய் மல்லையா

நன்றி: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை எனக்கு அனுப்பிய நண்பன் சசி குமாருக்கு.

டிஸ்கி: இப்பதிவின் நோக்கம் மதுப் பழக்கத்தைப் பிரச்சாரம் செய்வதல்ல. நகைச்சுவை, நகைச்சுவை, நகைச்சுவை மாத்திரமே.

நிரந்தர பந்தம் 7 மறுமொழிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி… - 1

மே 26, 2008 at 6:31 பிற்பகல் (நகைச்சுவை, பகுக்கப்படாதது) (, , , , )

என்னுடைய முந்தைய பதிவில் எழுதியதைப் போல சமுதாயம் மொத்தமும் ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய மூளை மட்டும் வேறு யோசிக்கிறது. அவ்வப்போது என்னை விவகாரமாகவே சிந்திக்க வைக்கிற சிந்தனைகளை ”எனக்கு மட்டும் ஏன் இப்படி” என்ற தலைப்பின் கீழ் எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

இப்போது நான் எழுதப் போகிற எ.ம.ஏ.இ நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வந்த விபரீத சிந்தனை. சன் குழுமத்தின் தெலுங்கு தொலைக்காட்சியான ஜெமினி டிவியில் ஜோடி நம்பர் ஒன் மாதிரி ஒரு நடனப் போட்டி போய்க்கொண்டிருந்தது. அடுத்து அடுத்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஜோடி நம்பர் ஒன் போலல்லாது பிரபலமல்லாதோருக்கான நடன நிகழ்ச்சி அது.

ஆடிக்கொண்டிருந்த ஒரு ஜோடி ஆட்டத்தை முடித்து நடுவர்களின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது. திரையில் தோண்றிய நடுவர்களைக் கண்டவுடன் பேரதிர்ச்சி. அங்கே… மா… ள… வி… கா…..

மாளவிகா… இது எங்க இங்க வந்துச்சு? அதிர்ச்சி விலகாமல் மாளவிகாவுக்கு இந்தப் பக்கமிருந்த நடுவரைப் பார்த்தால் மாபெரும் அதிர்ச்சி. கவர்ச்சிக் கிழவி ஜோதிலட்சுமி. இதயம் கொஞ்சம் பலமாக இருந்ததால் வந்திருக்கவேண்டிய முதல் அட்டாக் நல்லவேளையாக வரவில்லை. கவர்ச்சிக் கிழவிக்கு அடுத்து ஒரு தெலுங்கு சினிமா நடன நாரீமணி, யாரென்று தெரியவில்லை. சன் டிவியை நாறடித்த அதே கூட்டணி (லலிதாமணி மட்டும் மிஸ்சிங்).

நிகழ்ச்சி முடிந்ததும் ”குச்சி குச்சி கூனம்மா பிள்ளலிவ்வு” என்ற தெலுங்கு பாட்டு ஓடியது (தமிழில் குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்”). இந்த பாட்டுக்கு மாளவிகாவைத் தவிர மற்ற இரண்டு நடுவர்களும் கெட்ட ஆட்டம் போட்டனர். எ.ம.ஏ.இ. - 1 க்கும் இந்த கெட்ட ஆட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிந்தனையை (வேறு விதமாக) வளர்க்காமல் தொடர்ந்து படியுங்கள்.

இதன் பிறகுதான் என்னுடைய விவகாரமான சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது. யாருக்குமே தோண்றாத விபரீத சிந்தனை. இந்த நடன நிகழ்ச்சியையும் நிஜ நீதிமன்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது என்னுடைய விபரீத சிந்தனை.

யோசித்துப் பாருங்கள், நடன நிகழ்ச்சியின் நடுவர்களைப் போலவே நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதிகளும் நடந்துகொண்டால்… உதாரணத்துக்கு ஒரு நஷ்ட ஈடு வழக்கு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி அந்த பாதிக்கப்பட்டவரின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள அவரைக் கட்டிப்பிடித்து ஆடினால் எப்படி இருக்கும்?

அதே போல ஒருவருக்கு ஆயுள் தண்டனையோ தூக்கு தண்டனையோ வழங்கப்படுவதை, நடன நிகழ்ச்சிகளில் நிகழும் எலிமினேஷனுடன் ஒப்பிடலாம் அல்லவா? அவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நீதிபதி, வக்கீல்கள், குறிப்பாக அந்தக் குற்றவாளியை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வக்கீல், கைது செய்து அழைத்துவந்த போலீசார், அனைவராலும் அந்த குற்றவாளியைக் கட்டி அணைத்து ஆறுதல் கூற முடியுமா? அப்படிக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லும்போது தண்டனை வழங்கிய நீதிபதியின் உயிருக்கும், தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த பப்ளிக் ப்ராசிக்யூட்டரின் உயிருக்கும் என்ன உத்திரவாதம்?

நடன நிகழ்ச்சியில் நடுவரை எதிர்த்துப் பேசினால் இனி நீ ஆட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவரை விடுவித்துவிடுகிறார்கள். நீதிமன்றத்தில் மட்டும் ஒருவர் நீதிபதியை எதிர்த்துக் கேள்வி கேட்டால் இனி நீ வழக்கு நடத்த வேண்டாம் வெளியே போ என்று ஏன் அந்த நபரை விடுவிப்பதில்லை? மாறாக நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி அவருடைய குற்றத்தை அதிகப்படுத்துவது ஏன்?

குப்புறப் படுத்து மெத்தையைப் பிறாண்டிக்கொண்டே நீண்ட நேரம் யோசித்ததில் அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டேன். வழக்கம் போல் நாலு மணிக்கு எழுந்திருக்க வேண்டியவன் கேப் டிரைவர் கொடுத்த மிஸ்டு கால் புண்ணியத்தில் நாலு ஐம்பதுக்கு எழ நேரிட்டது. அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்துவிட்டு ஐந்து பத்துக்கு கேபில் அமர்ந்த பிறகும் ராத்திரி யோசித்த அதே விஷயம் மூளைக்குள் சுற்றி சுற்றி வந்தது. தயவு செய்து சொல்லுங்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி….

டிஸ்கி: இந்த பதிவுக்கு டிஸ்கியா என்று சிலர் வியப்படையலாம். ஆனாலும் டிஸ்கி போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஜோதிலட்சுமியைக் கவர்ச்சிக் கிழவி என்று அழைத்ததற்கு பெண்ணுரிமை ஆர்வலர்களிடமிருந்து கண்டனம் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் இந்த பதிவிற்கு டிஸ்கி மிகவும் அவசியமாகிறது.

ஜோதிலட்சுமிக்கு ”கவர்ச்சிக் கிழவி” பட்டம் கொடுத்தது நானல்ல. கொடுத்தவர் அண்ணாமலை தொலைக்காட்சித் தொடரில் நடித்த பொண்வன்னன், புருஷன் ஆஃப் சரண்யா ஆண்ட்டி. கவர்ச்சிக் கிழவி குறித்த மேலதிக விவரங்களுக்கு அவரையே தொடர்புகொள்ளவும்.

தொடை பதிவுக்கு பின்னூட்டம் போட்ட குந்தவை அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நல்ல எண்ணம் இல்லையாம். குந்தவையோடு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று கூடி செருப்பு, துடைப்பம், சாணக் கரைசல் இதை எல்லாம் எடுத்துக் கொண்டு சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறிவிடுவார்களோ என்ற பயமும் இந்த டிஸ்கி எழுதுவதற்கு முக்கிய காரணமாகும்.

நிரந்தர பந்தம் 19 மறுமொழிகள்

தொடை

மே 20, 2008 at 10:22 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , , , , )

பதிவுலக நண்பர்களால் பெரிதும் பிறழ உணரப்பட்ட பதிவன் என்ற வேதனை என் இதயத்தை முள்ளாய்த் தைத்துக்கொண்டிருக்கிறது. சமூகத்தின் சிந்தனை ஓட்டம் ஒருவாறாக இருக்க எனக்கு மட்டும் வேறு விதமாகவே தோண்றுகிறது. இது இயல்பான ஒன்றா, குணப்படுத்த முடியாத மனநோயா, என்னவென்றே தெரியவில்லை. உண்மையான அக்கறை உள்ளவர்கள் நல்ல ஆலோசணைகளை பின்னூட்டங்களாக வழங்கலாம். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

என் அன்புக்குரிய உளவியலாளர் மருத்துவர் மாத்ருபூதம் அவர்களும் இறைவனடி சேர்ந்துவிட்டார். புதிரா புனிதமா என்று பிரித்து மேய்ந்து கொண்டிருந்த சகோதரி ஷர்மிளாவும் இப்போது தேன்மொழியாள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கப் போய்விட்டார். யாராவது டாக்டர் ஷாலினியை சந்திக்க நேரம் வாங்கித் தந்தாலோ, கட்டணம் செலுத்த சில ஆயிரங்களை அள்ளி வழங்கினாலோ மிகப் பெரிய உபகாரம் என்று கருதுவேன்.

இந்த உபகாரங்களை எனக்குச் செய்துதரும் தகுதியுள்ள எவராவது இருந்தால் அவர்களது பெயரை பின்னூட்டம் வழியாகத் தெரிவிக்கவும். கஞ்சத்தனமாகச் சீட்டுக் கவியெழுதி அவர்களை அசிங்கப்படுத்த மாட்டேன், தாராளமாக ஒரு குயர் நோட்டுக் கவியே எழுதுவேன்.

சரி இப்போது எனது பிரச்சனைக்கு வருகிறேன். சாதாரணமாக ”தொடை” என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் யாருடைய ஞாபகம் வரும்? ”தொடை” என்று சொன்னால் நீங்களெல்லாம் உள்ளத்தை அள்ளிப் போகக் கூடிய அந்த நடிகையின் நினைவில் பரவச நிலையின் உச்சத்திற்கே போவீர்களில்லையா? ஆனால் அந்த நடிகை என் நினைவுக்கு வரவில்லை. சத்தியமா… நம்புங்க… அய்யோ, நம்புங்களேன்.

”யாரு நெனப்புதாண்டா வந்துச்சு உனக்கு” என்று நீங்கள் நற நறப்பது புரிகிறது. சொன்னால் தவறாகக் கருதிவிடக் கூடாது. பி.காம் முதலாண்டில் எனக்கு தமிழ்ப் பாடம் நடத்திய விரிவுரையாளர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஆம்பளையாக இருந்திருந்தால் அடுத்த நாளே மறந்திருப்பேன். பெண் விரிவுரையாளர் என்பதுதான் பல நாட்கள் என்னை வெட்கத்தில் கூசிக் குறுக வைத்தது.

”அட நாயே, அப்படி என்னதாண்டா நடந்தது” என்று கேட்கிறீர்களா? உங்கள் நியாயமான அவசரம் புரிகிறது. நானும் அதைத்தான் சொல்ல வருகிறேன், பொறுமை, பொறுமை. தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாக கையாளும் அதே கொசுவர்த்திச் சுருள் உத்தியைப் பயன்படுத்தி உங்களை எனது கல்லூரிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

அது தஞ்சாவூரின் பிரபலமான கல்லூரி. கல்லூரி என்றாலும் மானவர்களுக்கு வாராவாரம் தேர்வு நடத்திப் பள்ளிச் சூழலிலேயே மாணவர்களை வைத்திருக்கும் கல்லூரி அது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுழற்ச்சி முறையில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு நடத்தப்படும். அந்த சனிக்கிழமை சனியனை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்த வெள்ளிக்கிழமைகள் ஏராளம்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாராந்திரத் தேர்வுகளில் அதுவே கடைசித் தமிழ்த் தேர்வு. ஒரே ஒரு ஒரு-மதிப்பெண் வினாவால் ஐம்பதிற்கு நாற்பத்திமூன்று மதிப்பெண் எடுத்தும் எனது பெயர் கெட்டதுதான் மிச்சம். எனது நடத்தையை சந்தேகத்திற்குரியதாக மாற்றிய அந்த ஒரு கேள்வி நினைவுக்கு வரும் நாட்களில் இப்போதுகூட என்னால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. இப்பதிவை எழுதி முடித்துவிட்டு உறங்கவேண்டும். அப்போதுதான் காலை ஐந்து மணிக்கு அலுவலகம் கிளம்ப முடியும். ஆனால் இன்று இரவு நான் உறங்குவது சந்தேகமே.

”அட சனியனே அந்த எளவெடுத்தக் கேள்வி என்னன்னு சொல்லித் தொலைடா” என்ற கொலைவெறிக் கூச்சல் காதுகளில் விழுகிறது. சொல்கிறேன் என் அவமான வரலாற்றை, கேளுங்கள். தொடை என்பது என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. வணிகவியல் மாணவனிடம் எதற்க்கு விலங்கியல் பாடத்திலிருந்து கேள்வி கேட்டார்கள் அதுவும் தமிழ்த் தேர்வில் என்ற குழப்பம் என்னை சுழற்றியடித்தது. பக்கத்திலிருந்தவனிடமிருந்து கேள்வித் தாளைப் பிடுங்கிப் பார்த்தபோது அவனுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐயகோ.

மற்ற கேள்விகளுக்கு விடையளித்துவிட்டுக் கடைசிப் பத்து நிமிடத்தில் விடைத்தாளைச் சோதித்ததில் மீண்டும் தொடையிலேயே வந்து முட்டியது. நான் கேள்வியைச் சொன்னேன், மனவக்கிரமுள்ளவர்களின் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்வது எனது வேலையல்ல. தொடர்ந்து கேளுங்கள். மீண்டும் மீண்டும் யோசித்ததில் அது ஒரு உறுப்பு என்கிற தெளிவு பிறந்தது. அந்த தெளிவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, உடலின் உறுப்பு என்று விடையெழுதி அறைக் கண்கானிப்பாளரிடம் விடைத்தாளை வழங்கினேன்.

சரியாக ஐந்தாவது நாள் விடைத்தாள்களுடன் அந்தப் பெண் விரிவுரையாளர் எங்கள் வகுப்புக்கு வந்தார். வரிசை எண் படி எனது விடைத்தாள்தான் முதலில் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. எல்லாருடைய விடைத்தாளும் வழங்கப்பட்ட பிறகு எனது பெயர் அழைக்கப்பட்டது. ஒருவேளை நான் எல்லோரையும் விட அதிக மதிப்பெண்கள் வாங்கியதற்காக என்னை சிறப்பாக கவனிப்பார்களோ என்ற எதிர்பார்ப்புடன் எழுந்து நின்றேன்.

என் எதிர்பார்ப்பிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடுமளவுக்கு ஒரு புயலடித்தது. தொடை குறித்து நான் அளித்த விடை தவறு என்றும், ஒரு பெண்ணான அவரை இழிவுபடுத்தும் விதமாகவே நான் அவ்வாறு எழுதியதாகவும் என்னைத் தாளித்துப் பொறித்துவிட்டார். அந்தப் புயல் ஓய்ந்த போது தமிழ்ப் பாடவேளை முடிந்ததன் அறிகுறியாக மணியடித்தது. விடைத்தாளைப் புரட்டியபோது உடலின் உறுப்பு என்ற விடைக்கு அரை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. ஆக இது தவறான விடையுமில்லை. பிறகு எதுதான் சரியான விடை கோணாரைப் புரட்டியபோது (நான் புரட்டியது கோணார் தமிழுரை. மறுபடியும் சொல்கிறேன், வக்கிரம் பிடித்தவர்களின் கற்பனைக்கு நான் பொறுப்பல்ல) அதே கேள்விக்கான விடையாக “செய்யுள் உறுப்பு” என்று இருந்தது.

அத்துடன் முதலாம் ஆண்டு முடிந்தது. இரண்டாம் ஆண்டில் எங்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் ஒரு ஆண் விரிவுரையாளர். மூண்றாம் ஆண்டில் மொழிப்பாடங்கள் கிடையாது. அதனால் அந்த பெண் விரிவுரையாளரை மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் இல்லை. இரண்டாமாண்டில் தமிழ் விரிவுரையாளரிடம் பந்தயம் கட்டி எண்பது மதிப்பெண்கள் எடுத்தது, தொடர்ந்து இரண்டு முறை தமிழில் எழுபத்தைந்து மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியது, இதெல்லாம் அந்த பெண் விரிவுரையாளருக்கு தெரியாமலே போய்விட்டது.

சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் இன்னும் அங்கே வேலை பார்ப்பதாகக் கேள்வி. அதனால் அங்கே செல்வதைத் தவிர்த்தே வருகிறேன். தவிர்க்க முடியாமல் பட்டமளிப்பு விழாவுக்காக மட்டும் அந்தக் கல்லூரிக்குள் மீண்டும் காலை வைத்தேன். நல்ல வேளை, அந்த விரிவுரையாளர் கண்ணில் படாமல் வீடுவந்து சேர்ந்தேன்.

எனது கல்லூரி மீது எனக்கு எப்போதுமே அபிமானம் உண்டு. அந்தக் கல்லூரியால் பல துன்பங்களுக்கு ஆளானபோதும், நான் ஆளானபோது படித்த கல்லூரியல்லவா…. இருக்காதா பின்னே…

நிரந்தர பந்தம் 17 மறுமொழிகள்

வாயுத் தொல்லை

மே 17, 2008 at 11:06 நான் (நகைச்சுவை, பகுக்கப்படாதது) (, , , , , , , )

பொதுவாக வாயுத் தொல்லை என்றால் மக்களுக்கு ஞாபகம் வரக்கூடிய விஷயத்தைப் பற்றியதல்ல இப்பதிவு. ஆனாலும் வாயுத் தொல்லையால் அவதியுறுபவர்களுக்கும் என்னாலான ஆலோசணையை சொல்லிவிட்டு நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்வது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாயுத் தொல்லை யாருக்கு இருந்தாலும் அது மிகப் பெரிய தொல்லைதான். யாராலுமே சகித்துக் கொள்ள முடியாத சிரமம் இது. அவ்விதமான தொல்லை உங்களில் யாருக்காவது இருக்குமானால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அது சமுதாயத்துக்கு நீங்கள் செய்கிற மிகப் பெரிய தொண்டாக இருக்கும். நல்ல மருத்துவராக பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம் லேகிய வியாபாரிகளையாவது நாடலாம்.

தருமமிகு சென்னை மக்களுக்கு என் இதயத்தில் எப்போதுமே சிறப்பான இடம் உண்டு. அதனால் சென்னையில் லேகியம் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தை உயிரினும் மேலான சென்னை மக்களுக்காக சிபாரிசு செய்கிறேன். கச்சேரி ரோடு டப்பா செட்டிக் கடைஎன்று பரவலாக அறியப்பட்ட சித்த மருத்துவ பார்மசியில் அனைத்து விதமான உடல் பிணிகளுக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆகவே வாயுத் தொல்லைக்கும் அங்கே மருந்து கிடைக்கலாம். வெறும் பதினைந்திலிருந்து இருபத்தைந்து ரூபாய் விலையில் நல்ல லேகியங்கள் கிடைப்பதாக பயனடைந்தவர்கள் சொல்லக் கேள்வி.

மயிலாப்பூர் கச்சேரி ரோடு தெரியாதவர்கள் சென்னை வாசிகளாக் இருக்கவே லாயக்கற்றவர்கள். அப்படிப் பட்டவர்களை ஊர் கடத்துமாறுமயிலை முண்டகக் கன்னியை வேண்டிக் கொள்கிறேன். கச்சேரி ரோடுக்கு செல்லும் சில பேருந்து வழித்தடங்களையும் சொல்கிறேன். தி.நகர், சைதாபேட்டை, சின்னமலை, கிண்டி, அடையாறு, மந்தைவெளி போன்ற இடங்களில் வசிப்பவர்கள் 5-பி யில் ஏறி, மயிலாப்பூர் குளம் நிறுத்தத்தில் இறங்கி வசதிக்குத் தக்கபடி கச்சேரி ரோட்டுக்கு செல்லலாம். காசுள்ளவர்கள் கால் டாக்சியில் செல்லலாம், செலவு செய்ய யோசிப்பவர்கள் காலே டாக்சி என்று நினைத்துக் கொண்டு நடையைக் கட்டலாம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் இருப்பவர்கள் பிபி-19ல் ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 5-பி யில் செல்லலாம். திருவான்மியூர் வாசிகளுக்கு இரண்டு பேருந்து மாறுகிற சிரமம் இல்லை. 1ம் எண் (வெள்ளை போர்டு) பேருந்தில் லஸ் முணை சந்திப்பில் இறங்கிக் கொள்ளலாம். தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் இருப்பவர்கள் பிபி-21 ல் மந்தைவெளி வரை வந்து (தேவநாதன் தெரு சந்திப்பு பேருந்து நிறுத்தம்) அங்கிருந்து 5-பி யில் செல்லலாம்.

சென்னையின் மற்ற பகுதிகளில் எனக்கு வீடு இல்லாத காரணத்தாலும் (ஏண்டா, மந்தைவெளில மட்டும் சொந்த வீட்லயாடா இருந்தே), அந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு இல்லாமல் போனதாலும் பேருந்து மார்க்கங்கள் சரியாகத் தெரியாது. மற்ற இடங்களில் இருப்பவர்கள் தி.நகர் வந்துவிட்டால் 5-பி யைப் பிடிக்கலாம்.

தொடர்ந்து வருவது நான் சொல்ல வந்த வாயுத் தொல்லை பற்றியவை. இந்த வாயுத் தொல்லைக்கு உருளைக் கிழங்கு, பட்டாணி, துவரம் பருப்பு போன்றவை காரணம் இல்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஐ.ஓ.சி, பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரின் கூட்டு சதி, பொறியல் சதி, இன்ன பிற வெஞ்சன (சைட் டிஷ்) சதிகள்தான் இந்த வாயுத் தொல்லைக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஐ.ஓ.சி உள்ளிட்ட நாட்டுடைமை ஆக்கப்பட்ட எரிவாயுக் கம்பெனிகள் புதிய இணைப்புகள் வழங்கப் போவதில்லை என்ற முடிவை மத்திய அரசுக்குத் தெரியப் படுத்தியுள்ளன. மத்திய அரசு எண்ணை நிறுவனங்களின் பரிந்துரையை ஏற்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதனால் நாட்டுமக்களுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

பரிந்துரை 1: வயது நாற்பதை நெருங்கினாலும் திருமணம் செய்யும் முடிவைத் தள்ளிப் போட வேண்டுமாம்.

பரிந்துரை 2: அப்படியே திருமணம் செய்தாலும் தனிக்குடித்தனம் போகக் கூடாதாம்.

பரிந்துரை 3: அப்படியே போனாலும் மறு அறிவிப்பு வரும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதாம்.

பரிந்துரை 4: அப்படியே பெற்றுக் கொண்டாலும் குழந்தைகளுக்கு இலை, தழை, பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்ணக் கொடுக்க வேண்டுமாம்.

பரிந்துரை 5: எரிவாயு, நெருப்பு உள்ளிட்ட வார்த்தைகளை சொல்லுவது தண்டணைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படுமாம். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாம்.

இது போல் மேலும் இருபது பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி கடிதமெழுதியுள்ளார். கடிதத்தில் எண்ணை நிறுவனங்களின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவைக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்ததாகவும், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்னசாமி மூலமாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உங்களை விட அதிக எம்.பி க்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் சொல்லியே நாங்கள் கேட்கவில்லை. வெறும் பதினைந்து எம்.பி க்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதில் தங்களுக்கு எந்த சிரமமும் இல்லைஎன்று தெரிவித்ததாகவும் புருடா டாட் காம் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட சிலிண்டர்களின் மீது விளம்பரங்கள் வெளியிடலாம் என்றும், தன்னுடைய இந்த ஆலோசனையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் மக்கள் தொலைக்காட்சி மற்றும் பசுமைத் தாயகம் பத்திரிகையின் விளம்பரங்களை சிலிண்டர்களில் வெளியிட பா.ம.க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அரசின் இம்முடிவு வரைவு நிலையில் இருந்தாலும், அதை எதிர்த்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் போராட்டம் நடத்துகிறவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்என்று அனல் தெறிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். (தெறித்த அனலில் நிருபர்கள் சிலர் தம்பற்றவைத்துக் கொண்டதாக பத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.)

டிஸ்கி 1: லேகியம் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மேல் விலையுள்ளதாக இருந்தாலும், டப்பா செட்டி கடை மருந்து பலனளிக்காமல் போனாலும் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. மேலதிக விபரங்களுக்கு காண்ட்டாக்ட் மயிலை முண்டகக் கன்னி”.

டிஸ்கி 2: மேற்சொன்ன பேருந்து வழித்தடங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதற்கும் நான் பொறுப்பல்ல. மே.அ. விபரங்களுக்கு காண்ட்டாக்ட் கே.என். நேரு, மாமா ஆஃப் மாவீரன் நெப்போலியன்.

டிஸ்கி 3: எண்ணை நிறுவனங்களின் இம்முடிவு மக்கள் விரோதமானது, வேதனை தருவது என்றாலும், நம்மை நாமே பகடி செய்து ஆற்றிக்கொள்ள வேண்டியிருப்பதால்தான் இந்த பதிவை எழுதியுள்ளேன். மே.அ.வி. வேண்டுமென்றால் பின்னூட்டம் போடவும். ப.சி, ம.மோ.சி ஆகியோருக்கு ரிப்ளை கார்டுடன் கடிதம் எழுதித் தெரியப்படுத்துவேன். மயிலை முண்டகக் கன்னி மேல் சத்தியமாக பதில் வந்தால் நிச்சயம் பதிவாக போடுவேன்.

டிஸ்கி 4: டிஸ்கி 3 இதய சுத்தியுடன் உன்மையாக எழுதியது. ஆமென்.

நிரந்தர பந்தம் 7 மறுமொழிகள்

பிள்ளைகளிடம் பாரபட்சம்… காட்டப்படுகிறதா இல்லையா?

மே 11, 2008 at 10:12 பிற்பகல் (பகுக்கப்படாதது) (, , , )

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா இல்லையா? கடந்த இரு வாரங்களாக விஜய் டிவி நீயா நானா? வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு இது.

இதைக்குறித்து நான் எதுவும் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களின் வாயிலாக இப்பதிவைப் படிக்கப் போகிறவர்கள்தான் எழுத வேண்டும். இப்பதிவிற்கு பின்னூட்டம் அளிக்க சகபதிவர்கள் சிலருக்கு அழைப்பும் அனுப்ப உள்ளேன். தற்செயலாக வரக்கூடிய வாசகர்களும் பின்னூட்டமிடலாம்.

உங்கள் குடும்பத்திலோ, நீங்கள் பார்த்த குடும்பங்களிலோ நிகழ்ந்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். அவை எத்தகைய பாரபட்சங்கள் அல்லது அந்த பாரபட்சம் உங்களிடம் அல்லது நீங்கள் பார்த்தவர்களிடம் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கியது போன்றவற்றையும் எழுதலாம்.

எங்கே கொட்டுவது என்று தெரியாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு இது கூட ஒரு வடிகாலாக அமையலாம். உங்கள் அடையாளத்தை வெளிக்காட்ட விருப்பமில்லையெனில் உங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு கூட கொட்டிவிட்டுப் போகலாம்.

வாருங்கள். தவறாமல் எழுதுங்கள். இங்கே நீங்கள் இறக்கி வைப்பது உங்கள் மனதை அழுத்துகிற சுமையாகக் கூட இருக்கலாம்.

நிரந்தர பந்தம் 15 மறுமொழிகள்

« முந்தைய இடுகைகள்