யாரடி நீ மோகினி
இன்று மதியம் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் சில காட்சிகள் சன் டிவி யில் ஒளிபரப்பப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் “ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே” என்ற படத்தின் தமிழாக்கம். அதாகப்பட்டது ”பொம்பளைங்க வார்த்தைக்கு அர்தமே வேற”. ஹைதராபாதில் தெலுங்கில் பார்க்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. ஆகவே இத்திரைப்படம் குறித்து சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். படத்தைப் பார்த்த போது எனக்கு இப்போதுள்ள அளவு கூட தெலுங்கு தெரியாது (இப்பொ மட்டும் என்ன ராஜசேகர ரெட்டி ரேஞ்சுக்கா பேசுற என்று தெரிந்த நண்பர்கள் கேலி பேசுவார்கள்). பாஷை புரியாவிட்டாலும் படத்தை வெகுவாக ரசித்தேன்.
மிக நேர்த்தியாகச் செல்லும் திரைக்கதை இத்திரைப்படத்தை ஆந்திராவில் சக்கை போடு போட வைத்தது. தமிழில் தனுஷ், தெலுங்கில் வெங்கடேஷ், இக்கட நயன்தாரா அக்கட திரிஷா. தெலுங்கு ஜோடி மிகச்சிறந்த வேதியலை (அதுதான்பா கெமிஸ்ட்ரி) வெளிப்படுத்தியது. தமிழ் ஜோடி மாத்திரம் சளைத்ததா என்ன, நண்பர்கள் ஈமெயிலில் அனுப்பிய ஸ்டில்களிலேயே வேதியல் நன்றாகத் தெரிந்தது.
படத்தில் மிகவும் ரசிக்கும்படியான கதாபாத்திரம் வெங்கடேஷின் அப்பாவாக வந்த கோட்டா ஸ்ரீனிவாசராவ். யாரென்று தெரியாதவர்கள் ஏய், திருப்பாச்சி (சனியன் சகடை) மற்றும் சாமி படங்களைப் பார்க்கவும். கோட்டா மாதிரி சிறந்த நடிகர்களை இன்னும் எத்தனைக் காலம் தமிழ் சினிமாக்களில் வில்லனாகவே காட்டிக் கொண்டிருக்கப் போகிறோம்?
சன் டிவியில் பார்த்த சில காட்சிகளிலேயே கோட்டாவைப் போலவே ரகுவரனும் கலக்கியிருப்பது தெரிந்தது. “எவனும் எனக்கு கஞ்சி ஊத்த வேண்டாம். என்னைக்கு உன் கைல காசு வாங்கறேனோ அன்னைக்கே உத்திரத்தில தொங்கிருவேன்”. இதெல்லாம் பல அப்பாக்கள் உன்மையிலேயே தங்கள் பிள்ளைகளிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள். ரகுவரனின் நடிப்பில் நன்றாக வெளிப்பட்ட வசனங்கள் இவை. இப்போது ரகுவரன் நம்மோடு இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
கதாநாயகனின் நண்பனாக இங்கே கருணாஸ், அங்கே சுனில் (சுந்தர புருஷன் படத்தின் தெலுங்கு டப்பிங்கில் கதாநாயகன் இவர் தானுங்கோ). இவங்கதான் படத்தோட காமெடிக்கு இன்சார்ஜ்.
கதாநாயகியின் குடும்பமே சேர்ந்து நாயகனின் தட்டு நிறைய திண்பண்டங்களைப் பரிமாறித் திக்குமுக்காடச் செய்யும் காட்சியில் வெங்கடேஷ் மேல் வராத பரிதாபம் தனுஷ் மேல் வருகிறது. வாழ்த்துக்கள் தனுஷ். குறிப்பிடப் படவேண்டிய இன்னொரு கதாபாத்திரம் ஸ்ரீகாந்த். நம் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த்தே தான். தெலுங்கில் அவர் தான் திரிஷாவின் முறைப் பையன். தமிழில் நடித்திருப்பவர் எப்படி நடித்திருக்கிறார் தெரியவில்லை. தெலுங்கில் திரிஷாவின் தாத்தாவாக நடித்த கே. விஸ்வநாத் தான் தமிழில் நயன்தாராவுக்கும் தாத்தா. கொடுத்து வைத்த தாத்தா. ஜூன் மாதம் சென்னை செல்லும்போது படத்தைப் பார்த்துவிட்டு வந்து மிச்சத்தை எழுதுகிறேன். படத்தைப் பார்க்காதவர்களின் சஸ்பென்சைக் கெடுக்கக் கூடாது என்பதால் இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறேன். சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் (கவனிக்கவும் தமிழ்ப் புத்தாண்டு அல்ல, அந்த வாழ்த்து தை முதல் நாள் சொல்கிறேன்).
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 2, 2008 இல் 5:00 பிற்பகல்
யோவ் மொக்க படத்துக்கெல்லாம் பதிவு போட்டு ஏன்யா மானத்த வாங்குற….
vijaygopalswami சொன்னது,
மே 2, 2008 இல் 6:09 பிற்பகல்
தெலுங்குல நல்லாத்தான்யா இருந்துச்சு. அதையும் இதையும் ஒப்பிட்டு எழுதினேன். இது ஒரு குத்தமா? ஜூன் மாசம் படம் பாத்திட்டு வந்து எழுதுறேன்னு தானே முடிச்சிருந்தேன் அத பாக்கலியா?
துளசி கோபால் சொன்னது,
மே 23, 2008 இல் 2:38 நான்
நேத்துதான் படம் பார்த்தேன்.
நல்லாதான் இருக்கு.
ரகுவரனோட வசனங்களுக்கும், அவரோட மரணத்துக்கும் ஒரு சம்பந்தம்வந்து மனசென்னவோ கனத்துப்போனது நிஜம்.
தமிழ்ப்படத்துலே வசனங்கள் நல்லா இயல்பா வந்துருக்கு. செல்வராகவன் எழுத்தா?