சதன் எழுதும் மலபார் தேங்காய்…

10:51 பிப இல் திசெம்பர் 20, 2008 | அரசியல், கதைகள், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

விரைவில் ஆரம்பம், “சதன் எழுதும் மலபார் தேங்காய்…”. வரும் திங்கள் முதல் அடுத்த ஐந்து வாரங்கள் வெளிவர உள்ளது. தவறாமல் படியுங்கள், என்ற பீடிகைகள் ஏதுமின்றி இப்போதே தொடங்குகிறது “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” சிறுகதை. இக்கதையை ஐந்து வாரங்கள் தொடராக எழுதினால் உங்களில் பலபேர், மூலம், பௌத்திரம், குடலிறக்கம், மூட்டுவலி, சோரியாசிஸ், ஆஸ்துமா, சொறி, சிரங்கு, பக்கவாதம், மாரடைப்பு, கிட்னி ஃபெயிலியர், அல்சர், எய்ட்ஸ், இவற்றுள் ஒன்றோ அல்லது அத்தனையுமோ வரக் கடவது என்று என்னைச் சபிக்கலாம். அவற்றைத் தவிர்க்க கதையை இன்றே முடித்துக்கொள்கிறேன். நோ சாபம் ப்ளீஸ்.

ஹரிஹரசுதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சதன் ஒரு எழுத்தாளன் மற்றும் மீடியா தொழிலதிபன். நீங்கள் நினைப்பதுபோல் அவன் ஒன்றும் இலக்கியவாதி இல்லை. அவன் எப்படி எழுத்தாளன் ஆனான், என்ன மாதிரி எழுத்தாளன் ஆனான் என்பதைச் சொல்வது தான் இந்த சிறுகதை. ஹ.ஹ.சு.வின் முழுப் பெயரையும் அடிக்கடி சொல்வது சாத்தியப்படாது என்பதால் இனி சதன் என்றே அழைப்போம்.

சாந்தோம் குயில்தோப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்தான் சதன் வழக்கமாக தம்மடிக்கும் பெட்டிக்கடை இருந்தது. சதனின் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் வீணாகக் கழிந்திருந்தது. ஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில், அதே கடையின் முன்பு, பில்டர் கோல்டு ஒன்றின் கடைசி இழுப்பில், தானும் ஒரு தொழிலதிபனாவது என்று முடிவெடுத்தான். அதைத் தொடர்ந்து என்ன தொழில் செய்வது என்று நண்பர்களுடன் விவாதம் தொடங்கியது. பட்டிணப்பாக்கம் டாஸ்மாக்கில் ஏறக்குறைய ஆறு மணிநேரத்துக்கு மேலாக ஆராய்ச்சி நடந்தது. அவனுடன் வந்திருந்த ஆறு நண்பர்களில் இருவர் ஆம்லேட் போட்டது தனிக்கதை. ஆம்லேட் போட்டவர்கள் போக மீதமிருந்த நண்பர்களுடன் ஆராய்ச்சி தொடர்ந்தது.

சதனுக்கு இயல்பிலேயே தமிழார்வம் அதிகம் என்பதால், எழுத்தாளனாகலாம் என்ற யோசனையை ஒரு நண்பன் முன்வைத்தான். பெரிய முதலீடு எதுவும் தேவைப்படாது என்பதால் சதனுக்கும் அந்த யோசனை சரியென்றே பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று யாரோ ஒருவரின் மேடைப்பேச்சில் கேட்டது அவனைச் சற்றே கலவரப்படுத்தியது. அவனுக்கு ஏறியிருந்த போதையில் அந்த பயம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. எழுத்தாளனாவது என்று தீர்மானமாகவே முடிவெடுத்துவிட்டான்.

பேச்சு எதைப்பற்றி எழுதுவது என்ற திசையில் சென்றது. அதுவரை பதினெட்டு ரவுண்டுகள் போயிருந்ததால் அவர்கள் போதையில் இருந்தார்கள் என்று சொல்வதை விட ராஜ போதையில் இருந்தார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த ராஜ போதை அவர்கள் இருக்குமிடம் சூழல் முதலியவற்றை மறக்கடித்திருந்தது. இடுப்புக்கு மேலே உள்ள பிரச்சனைகளை எழுதப் பல பேர் இருப்பதாலும், இடுப்புக்குக் கீழே உள்ள விவகாரங்களை எழுதுவோர் குறைவாக இருப்பதாலும், முன்னதைத் தவிர்த்து பின்னதைத் தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இவை

எழுத்தாளனுக்குப் பேனாவை விட புணைப்பெயர் முக்கியம் என்ற அதி உன்னதமான கொள்கைப் பிடிப்பு சதனுக்கும் இருந்தது. என்ன தான் நாம் சதன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டாலும் கதையோட்டத்தில் நமது நாயகன் இன்னும் ஹ.ஹ.சு. தான். சிறிதளவு வாசிப்பனுபவம் உள்ள சதனுக்கு அகிலன் எழுத்துக்களில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. பல வருடம் முன்பே காலமான ஒரு எழுத்தாளரை அவமதிக்க விரும்பாத சதன், அகிலனைத் தவிர்த்து வேறு புணைப்பெயர்களை முயற்சி செய்யலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டான். எழுதப் போவது கிளுகிளுப்பு சமாச்சாரம் என்பதால் கிளுகிளுப்பு சாம்ராஜ்யத்தின் பேரரசி (ராதிகா அம்மையாரைச் சொல்லவில்லை, அவர் செந்தமிழ் அரசி) ஷகிலா அவனது நினைவைக் கடந்து செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அகிலனையும் ஷகிலாவையும் கோத்து ஷகிலன் என்று ஒரு பெயரை இறுதி செய்தான். நண்பர்களுக்கும் அதுவே பிடித்திருந்தது.

மற்ற விஷயங்களை நண்பர்களுடன் கலந்தாலோசித்தாலும், கதை குறித்து சதன் எவருடனும் விவாதிக்கவில்லை. சொந்த சிந்தனையிலேயே கதைகளை எழுத வேண்டும் என்பதே அவனது விருப்பம். பெங்களூர் சரோஜா தேவி, பருவம், தேன் சிட்டு, போன்ற புத்தகங்கள் தரவுகளாகப் பயண்பட்டது. எல்லா புத்தகங்களிலும் கதாபாத்திரங்கள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்வது போலவே இருந்தது. ஆனால் சதனின் கற்பனை வேறு விதமாக வேலை செய்தது. கதை எழுதுகின்றவனே ஒவ்வொரு கதையிலும் நாயகனாக இருப்பது போல எழுதினான். ஒரே ஆள், பல அனுபவங்கள். இது தான் அவனது கதை உத்தியாக இருந்தது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்று புத்தகத்துக்குப் பெயரும் வைத்துவிட்டான். ஒவ்வொரு கதையையும் தன்னையே நாயகனாகப் பாவித்து எழுதியிருந்தான். (இது தான் ஹ.ஹ.சு. சதன் ஆன கதை)

கதையை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டு வருமா வராதா என்று ஏங்கி, வீங்கி அலைவதிலெல்லாம் சதனுக்கு இஷ்டமில்லை. அவனே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவது தவிற வேறு வழியில்லை என்று எண்ணினான். ஏறக்குறைய ஒரே வாரத்தில் இருபது கதைகளுடன் தனது மேல்நிலைப் பள்ளித் தோழன் ஒருவன் நடத்தும் அச்சகத்துக்குச் சென்றான். பட்டிணப்பாக்கத்தில் சதனுடன் விவாதத்தில் கலந்துகொண்ட ஆறுபேரும் பார்ட்னராக இணைந்து பத்திரிகையைத் தொடங்கினர். அச்சக நண்பன் மட்டும் இந்த ஆட்டைக்கு வர இஷ்டமில்லாமல் ஒதுங்கியே இருந்தான். தன்னுடைய வேலைக்கும் பொருட்களுக்கும் உரிய தொகை வந்துவிட்டால் போதும் என்ற முடிவுடனிருந்தான் அவன்.

வெவ்வேறு வேலைகளில் இருந்த நண்பர்களின் மேன்சன் வாடகைப் பணம், கழுத்தில் கையில் கிடந்த சொற்ப தங்கம், எஸ்.எல்.ஆர். சைக்கிள், டி.வி.எஸ். சேம்ப் உள்ளிட்ட வாகனங்கள், அனைத்தையும் தின்று முதல் இஷ்யூ வெளிவந்தது. ஆயிரம் பிரதிகள். கடைக்கு இருபது என்று விநியோகிப்பது அவர்களுடைய மார்கெட்டிங் உத்தி. விற்ற பிறகு காசு கொடுத்தால் போதும் என்ற அறிமுகச் சலுகை வேறு. சதன் அவன் பங்குக்கு நூறு புத்தகங்களை எடுத்துக்கொண்டு சில கடைகளுக்குச் சென்றான். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடைகாரர் புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தார். புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சற்று மறைவாக இருந்த டீக்கடையிலிருந்தபடி கடையை நோட்டமிட்டான். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு பதுங்கிப் பதுங்கிப் பள்ளிச் சீருடையில் வந்த பையன் ஒருவன் கையை நீட்டிக் காட்டி மலபார் தேங்காயை வாங்கிச் சென்றான். சதனுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமிதம்.

மறுநாள் மீண்டும் அதே கடையை ரகசியமாகக் கண்காணித்தான். முதல் நாள் கொண்டு வந்து கொடுத்த இருபது புத்தகங்களில் எட்டு மட்டுமே மீதம் இருந்தது. கடைக்காரரிடம் சென்ற போது மறு பேச்சில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். மறக்காமல் அவனது விலாசத்தையும், அடுத்த இஷ்யூ எப்போது வரும் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு அனுப்பினார். ஒரு மாதம் கழித்துக் கணக்குப் பார்த்தபோது நூற்றி இருபது பிரதிகள் மிஞ்சிய போதும் போட்ட காசுக்குப் பாதகமில்லாமல் ஓரளவு லாபமும் வந்திருந்தது.

ஒரே மாதத்தில் அடுத்த இஷ்யூவுக்கான கதைகள் ரெடியானது. இம்முறையும் ஆயிரம் பிரதிகள். கடந்த முறை மிஞ்சிய நூற்றி இருபது பிரதிகளுக்கும் இந்த இஷ்யூவின் அட்டையை ஒட்டி அவற்றையும் கடைகளுக்கு அனுப்பினான் சதன். புத்தகங்களை ஸ்டேப்லர் அடித்து அனுப்புவதாலும், வாங்குகிறவன் கடையிலேயே பிரித்துப் பார்த்து எடுத்துச் செல்ல மாட்டான் என்பதாலும் சதன் தைரியமாக இவ்வாறு செய்திருந்தான். இரண்டாவது இஷ்யூவிலேயே தேர்ந்த தொழிலதிபனாகிவிட்டான் சதன்.

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சதன் தென்னிந்தியாவில் கவனிக்கத்தக்க ஊடகத் தொழிலதிபர். சதனின் செய்தி ஏடு பல எதிர்ப்புகளுக்கிடையில் தமிழகத்தில் மூண்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருது வேறு வழங்கப்பட்டது. ஆளுங்கட்சி மத்திய அமைச்சர் ஒருவருடனான நெருக்கம் காரணமாக எஃப்.எம். ரேடியோ ஒன்றைத் துவக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான். என்னதான் பெரிய தொழிலதிபராக மாறியிருந்தாலும், அவனுடைய அச்சகத்தில் “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” புத்தகம் ரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இதற்கெனவே கதை இலாகா ஒன்றும் “ஷகிலனின்” (அதாவது சதனின்) தலைமையில் இயங்கிவருகிறது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்ற ஓர்குட் கம்யூனிட்டிக்கு மட்டும் பதினாறாயிரம் உறுப்பினர்கள் (வெவ்வேறு பெயர்களில் இந்தப் புத்தகத்துக்குப் பல கம்யூனிட்டிகள் இருக்கின்றன, பத்தாயிரத்துக்கும் குறையாத உறுப்பினர்களுடன்). எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இன்றளவும் கதைகளை மட்டும் சதனே தேர்ந்தெடுப்பதாகக் கேள்வி.

— முற்றும் —

பின்குறிப்பு: அந்தக்காலத்து ரோஜா முதல் இந்தக்காலத்து நரசிம்மா வரை (அதற்குப் பிறகும்) எல்லாப் படங்களிலும் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகக் காட்டப்படுவது எப்படித் தற்செயலானதோ, வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் ஓரினச்சேர்கையாளர்களுக்கு இளா, அமுதன் என்று தூய தமிழில் பெயர் வைத்தது எப்படித் தற்செயலானதோ, அப்படியே ஹரிஹரசுதன் என்ற வடமொழி மேட்டுக்குடிப் பெயரை இந்தக் கதையின் நாயகனுக்கு வைத்ததும் தற்செயலானதே.

கதை விவாதம்…

11:48 முப இல் திசெம்பர் 7, 2008 | கதைகள், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image.png

இயக்குநர் பரிசல் அவர்களின் அடுத்த படத்துக்கான டிஸ்கஷன் சீரியசாகப் போய்க்கொண்டிருக்கிறது. இயக்குநருக்கு ஆக்‌ஷன் ஸ்டோரி எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் வெயிலானின் விருப்பமோ லவ் சப்ஜெக்ட். கடைசியில் இயக்குநர் தயாரிப்பாளரின் வழிக்கு வருகிறார். லவ் சப்ஜெக்டை ஒரு ரொமேண்டிக்கான இடத்தில் காட்டவேண்டும் என்று படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கவனிக்க உள்ள லக்கிலுக் கருத்துத் தெரிவிக்கிறார். உதகமண்டலம் சரியான ஸ்பாட் என்றும் சாங் மட்டும் ஸ்விட்சர்லாந்திலும், ஃப்ரான்சிலும் எடுக்கலாம் என்று ஒளிப்பதிவாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கும் கேபிள்ஷங்கர் தன் அபிப்ராயத்தைக் கூற, லேசாக ஜெர்க் ஆகிறார் தயாரிப்பாளர்.

லவ்வு சுவிஜர்லாந்துலயும், ஃப்ரான்சுலயும் தான் வருமா? ஏன், விருதுநகர்லயும், கோவில்பட்டிலயும் வராதா? என்று பட்ஜெட்டை நினைத்தபடி புதிய பாரதிராஜாவாகக் கர்ஜிக்கிறார் தயாரிப்பளர், அண்ணன் வெயிலான். இடையில் இயக்குனர் தலையிட்டு “ஓக்கே, கூல்… ஸ்டோரி ஊட்டில நடக்குது… சாங்ஸ் எல்லாம் பொள்ளாச்சிலயும், டாப் ஸ்லிப்புலயும்… நடுவுல ஒரு ப்ளாஷ்பேக் சீன் மட்டும் கோயமுத்தூர்ல” என்று கச்சிதமாக அனைவரையும் ஸ்டோரிக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர் பரிசல். என்ன இருந்தாலும் gap10 ஆஃப் த ஷிப் அல்லவா.

“சரி ஹீரோ ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே,” நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய ஃபைனான்சியர் நந்து (நிலாவின் தகப்பனார்) அப்போது தான் ஆட்டைக்குள் வருகிறார். “என் மனசுல ஒரு ஹீரோ இருக்காரு… அவரு நடிக்க ஒத்துக்கிட்டா கிட்டத்தட்ட படம் 200 நாள் கியாரண்டியா ஓடும். நியூ ஃபேஸ் தான். ஆனாலும் அவரோட கண்ல ஒரு ஃபயர் தெரியுது,” என்று தொடர்ந்த இயக்குனரை மறித்து “ஹீரோயின் யாரு, அத மொதல்ல சொல்லுங்கப்பா…. தமண்ணாவ ஹீரோயினா போட்டா மினிமம் கியாரண்டில எல்லா ஏரியாவும் வித்துரும், தமண்ணா டேட்ஸ் கெடைக்கலேன்னா தெலுங்குல சோனியான்னு ஒரு புதுப் பொண்ணு வந்துருக்கு “ஆமே சூசி சூசி சச்சு போத்துன்னே உன்னானு, தெலுசா மீக்கு,” என்று எமோஷனலாக ஜோதியில் ஐக்கியமாகிறார் ஒளிப்பதிவாளர் கேபிள்.

“எவ்வளவு செலவு பண்ணி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம், சுச்சு வந்தா பாத்ரூமுக்கு போகவேண்டியது தானே சார்” என்று கேபிள் தெலுங்கில் சொன்னதன் மீனிங் தெரியாமல் வெயிலான் அக்கறையாக அட்வைஸ் பண்ணுகிறார். “சார், அது சுச்சு இல்ல சார், சச்சு, சச்சு, சொல்லுங்க சச்சு” என்று கேபிள் வெயிலானுக்கு தெலுங்கு வகுப்பெடுக்க, அது புரியாத வெயிலான் “வேணும்னா, சச்சுவ ஹீரோயினுக்கு பாட்டியா போட்டுக்கலாம், டைரக்டர் சார், இவரு ரொம்ப ஆசப்படுறாரு. ஹீரோயினுக்கு ஒரு பாட்டி கேரக்டர் வச்சுருங்க” என்று சொல்ல “அய்யோ” என்று ஹை டெசிபலில் அலறுகிறார் கேபிள்.

“ப்ளீஸ், எல்லாரும் கொஞ்சம் சீரியசா கவனிங்களேன். லவ் ஸ்டோரின்னாலும், இது முதல் மரியாதை மாதிரியான ஒரு சப்ஜெக்ட். அதுக்குத் தகுந்த மாதிரி நான் ஒரு ஹீரோவ யோசிச்சு வச்சுருக்கென் என்கிறார் இயக்குனர். “மனுஷன் அல்ட்ரா மார்டன் யூத் மாதிரியே இருப்பாரு,” தொடர்ந்து பரிசல் சொன்னதைக் கேட்ட வெயிலான் லேசாக ஜெர்க்காகிறார் “யூத்து மாதிரியா… அப்ப யூத்து இல்லியா?” “தப்பு தப்பு, கன்னத்துல போட்டுக்குங்க. நீங்க இப்படி சொன்னது தெரிஞ்சா அவரு நடிக்கவே ஒத்துக்க மாட்டாரு.” என்று மம்மியைக் கனவில் கண்ட ர.ர. மாதிரி அலறுகிறார் இயக்குநர்.

“சார், மொதல்ல சாங்சப் பத்தி டிசைட் பண்ணுங்க. அது தான் படத்தோட கேச்சியான போர்ஷன்,” ஒளிப்பதிவாளரின் ஐடியாவைக் கேட்டு குஜால் ஆகிறார் தயாரிப்பாளர். “பா. கஜய், கா. குத்துக்குமார், பூமறை இப்படி வழக்கமான ஆளுங்களையே போட்டு பாட்டெழுத வைக்கிறது எனக்கு இஷ்டமில்லை. நியூ பேஸ் யாரையாவது யூஸ் பண்ணனும். எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர், “அலசல்”னு ஒரு ப்ளாக் நடத்துறாரு, அவர பாட்டெழுத வைக்கலாம்னு யோசிக்கிறேன்” என்கிறார் இயக்குனர். இங்கே தான் மீண்டும் சீனுக்கு வருகிறார் லக்கி, “யப்பா, அவரு கவியரங்க ரேஞ்சுக்கு கவித எழுதுறவரு. அவரப் போயி படத்துக்கு பாட்டெழுத சொன்னா சரிவருமா? அதுவுமில்லாம அவராண்ட ஏற்கெனவே எவனோ ஒரு டுபாகூரு சினிமால பாட்டெழுதுறீங்களான்னு கேட்டு கலாசிட்டான். இனி நெஜமாவே யாராவது பாட்டெழுத வற்றீங்களான்னு கேட்டாலும், பாட்டில ஒடச்சு வவுத்துல சொருவிருவாரு ஜாக்கிரத,” என்கிறார்.

“இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ரிஷான் ஷெரிஃப்னு கத்தார்ல ஒருத்தர் இருக்காருபா, அவருதான் கரெக்ட். அவரு வேற ஏற்கெனவே ஒரு கும்பல் சேத்துக்கிட்டு “கொலை வெறிக் கவுஜைகள்”ன்ற பேர்ல கவிதை எழுதிக்கிட்டிருந்தாரு, என்ற நந்துவை (நிலாவின் தகப்பனார்) தடுத்தாட்கொள்கிறார் லக்கிலுக். “கத்தார்லாம் வேண்டாம், ஃப்ளைட் டிக்கெட்லாம் எடுக்க வேண்டியிருக்கும், நமக்குத் தெரிஞ்சு “விஜய் கோபால்சாமி”ன்னு ஒரு தம்பி ஹைதராபாத்ல இருக்காரு. ரீமிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டு. கேசினேனில (கேசினேனி பஸ்) நான் ஏசி டிக்கெட் எடுத்துக் குடுத்தா போதும், நீங்க இருக்கற எடத்துக்கே வந்து வேலைய முடிச்சுக் குடுத்துடுவாரு,” என்று சொல்ல காஸ்ட் எஃபெக்டிவாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பிலும் ஏற்கப்படுகிறது.

முதல் கட்டமாக தொலைபேசியில் கான்பெரன்ஸ் கால் போட்டு ஒரு பாடலுக்கான சூழல் விளக்கப்படுகிறது. இசையமைப்பாளர் என்று ஒருவரை போடுவதற்கு பட்ஜெட் அனுமதிக்காததால் தற்சமயம் பாப்புலராக இருக்கிற பாடல்களையே ரீமிக்ஸ் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. சூழல் இது தான், புகைப்படக் கலையில் (படம் எடுத்துக்கொள்கிற கலை) மிகுந்த ஈடுபாடு கொண்ட நாயகனுக்கு லவ் அட் ஃபாட்டிஎய்ட்த் சைட். அந்த சூழலில் ஒரு டூயட். இதற்கு சுப்ரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடலின் ட்யூன் வழங்கப்படுகிறது.

சி டிரைவ் மொத்தத்தையும் சல்லடை போட்டுத் தேடியும் விஜய் கோபால்சாமிக்குக் கண்கள் இரண்டால் பாடல் கிடைக்கவில்லை. ஒருவெப்சைட் டாட் காமிலிருந்து பாடலை பதிவிறக்கம் செய்து டெஸ்க் டாப்பில் சேவ் பண்ணுகிறார் வி.கோ. பின்னர் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடலை வின் ஏம்ப் இல் ஓப்பன் செய்கிறார். பாடலைக் கேட்டபடியே அவர் எழுதியெ ரீமிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு. பாடலை எழுதிக்கொண்டிருந்தபோதே வி.கோ.வின் செல்லுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அனுப்பியவர் இயக்குனர். “சந்திப்பிழையோடு எழுதினால் ஹீரோ ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார். ஜாக்கிரதை” என்று இருந்தது. ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார் என்று இருந்ததே தவிற யாரை அடிப்பார் என்று சொல்லவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று சந்திப்பிழை இல்லாமல் எழுத முடிவு செய்கிறார் பாடலாசிரியர். சந்திப்பிழை என்றால் என்ன என்று தெரியாத வி.கோ. பல இடத்திலும் தேடிச் சலித்துப் போய் கடைசியில் சந்திப் பிழை பதிவு பார்த்துத் தெரிந்து கொள்கிறார்.

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

பெண்:

கவுக்க எண்ணி சில நாள்… அருகில்… வருவேன்…

உந்தன் பர்சு போது என நான்… நினைத்தே… நகர்ந்தேனே -வளைச்சு

போட்டோ எடுத்தாய் பல போட்டோ எடுத்தாய்

கேமெரா கதறக் கதறக் கதறக் கதற போட்டோ எடுத்தாய்….

ஆண்:

சரக்கும் இல்லாது உறக்கம் வராத

பொழுதுகள் உன்னோடு கழியுமா…

டாப் சிலிப் போவோமா, உதகைக்குப் போவோமா

அதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒழியுமா…

பெண்:

மணிப்பர்சின் தடிமனைப் பார்க்கிறேன்…

கொஞ்சம் கணமாய் இருந்தால் வருகிறேன்…

இதுவரை பல பேரை…

நான் போட்ட ஆட்டை…

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்…

பெண்:

என் புருஷன் அறியாத உன் மனைவி தெரியாத

தூரத்துக்கு நாம் சென்று பழகுவோம்…

நமக்குள் இப்போது இருக்கிற கசமுசா

வெளிய தெரிஞ்சிருச்சுன்னா வெலகுவோம்….

ஆண்:

இதைப்போல் பெஸ்ட்டு ஐடியா இல்லை

அருகினில் என்னோட மனைவி இல்லை

தடை இல்லை சேர்ந்திடவே… உன்னோடு – தினம்

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

அறிமுக பாடலாசிரியர் என்பதால் டைட்டில் கார்டில் மட்டும் பெயர் போடுவதாகவும், வேறு ரெமுனரேஷன் எதுவும் கிடையாது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் போடப்பட்ட கண்டிஷனையும் ஏற்றுக்கொண்டு விஜய் கோபால்சாமி எழுதிய பாடல் இது.

பாடலால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளர், ஃபைனான்சியர், ஒளிப்பதிவாளர் அண்டு கம்பெனி அடுத்து கதாநாயகனைத் தொடர்புகொள்ளலாம் என்று முடிவெடுக்கிறது. இம்முறை இயக்குனர் தனது செல்லில் கதாநாயகனின் எண்ணை பயபக்தியுடன் ஒத்தி, கால் பட்டனை அழுத்துகிறார். மறுமுனையில் போன் எடுக்கப்பட்ட உடன், விஷயத்தை சொல்லுகிறார். கொஞ்சம் நேரம் கழித்து ஐந்து விநாடிக்கு ஒரு முறை “சரிங்…” “சரிங்…” என்று பத்து இருபது முறையாவது சொல்லியிருப்பார்.

போனை வைத்துவிட்டு வந்த இயக்குநரிடம் அனைவரும் கோரசாக “ஹீரோ என்ன சொன்னாரு” என்று கேட்கிறார்கள். குரலில் இருந்த பக்தி விலகாமல் “சினேகாள ஹீரோயினா போட சொல்றாரு” என்றார் பரிசல்.

image.png

கு(வெ)றுங்கதைகள் ஐந்து

7:54 பிப இல் செப்ரெம்பர் 22, 2008 | கதைகள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்:

1

வாசுதேவன் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்குச் செல்கிறார், சியாட்டிலில் இருக்கும் மகன் வீட்டுக்கு. தினமும் இரண்டொருவர் இது குறித்து விசாரிக்க வாசுதேவனின் வீட்டுக்கு வருவதுண்டு. அன்று வாசுதேவனிடம் மாட்டியவர் மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்திடம் ஏதோ அவர் தான் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தையே வடிவமைத்தது போல அளந்துகொண்டிருந்தார்.

“சார் போஸ்ட்”, சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார் வாசுதேவன். “சார், ஸ்டாம்ப் ஒட்டாம வந்திருக்கு. எட்டு ரூவா குடுத்தீங்கன்னா லெட்டரக் குடுத்துட்டுப் போயிருவேன்” போஸ்ட்மேன் மிகவும் பணிவாகவே சொன்னார். எட்டு ரூபாய் என்று காதில் விழுந்தது தான் தாமதம், மிளகாய் அரைத்த அம்மியில் வெற்றுடம்புடன் உட்கார்ந்த மாதிரி எரிந்து விழ ஆரம்பித்தார். “ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்புற அளவுக்கு கேடு கெட்ட சொந்தக்காரனுங்க எவனும் எனக்கு இல்லை. எடுத்துக்கிட்டு கெளம்பு…” இது போதாதென்று “வந்துட்டானுங்க லெட்டர எடுத்துக்கிட்டு…” என்று முனகலுடன் வீட்டுக்குள் நடையைக் கட்டினார். அவருக்கு எங்கே தெரியும், உறைக்குள் இருப்பது முந்தாநாள் ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் அவரையும் அறியாமல் தொலைத்த அவரது பாஸ்போர்ட் என்று.

 

2

மன்னர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஓய்வறையில் கு(வெ)றுங்கதை இரண்டின் நாயகன் வேலு காமர்ஸ் ஆசிரியர் உமாபதி முன் மிரள மிரள நின்றுகொண்டிருந்தான். பள்ளிக்கு வந்த பயிற்சி ஆசிரியை ஒருவரை கேலி செய்ததாய்க் குற்றம் சாட்டப்பட்டிருந்தான் நமது நாயகன். பிசிக்ஸ் ஆசிரியர் பாண்டியன் “சார், பாத்ரூம்ல ஹெச்.எம். பேரையும் லேப் அசிஸ்டண்ட் ரம்யா பேரையும் சேத்து எழுதி வச்சது கூட இவனாத்தான் சார் இருக்கும். மூஞ்சப் பாருங்க…” தன் பங்குக்குக் கோத்துவிட்டார். இரண்டாவது பாடவேளை முடிந்து திரும்பிய தமிழய்யா பூவராகன் (தசாவதார பூவராகனுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) “அய்யா, ஆங்கில ஆசிரியை மல்லிகா அம்மையாருக்குக் காதல் கடிதம் கொடுத்தது கூட இவனாகத் தான் இருக்க வேண்டும். முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தே கண்டறியலாம்,” எரிகிற நெருப்பில் நெய்யை அண்டாவோடு கவிழ்த்துவிட்டு அமர்ந்தார்.

சரமாரியாக அடி உதைகளை வாங்கிக்கொண்டு வகுப்புக்குத் திரும்புகிறான் பதினோறாம் வகுப்பு ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த நமது நாயகன். பாவம் வேலு, உதை வாங்க வேண்டியது அவனல்ல, பதினோறாம் வகுப்பு ‘ஊ’ பிரிவு ‘கதிர்’வேலு.

 

3

காட்டில் வேட்டையாடிக் களைத்துப் போன விகட தேசத்து மன்னன் துங்கதன் தூரத்தில் தெரிந்த பர்ணசாலையை நோக்கிக் குதிரையை விரட்டினான். அங்கே பர்ணசாலையின் வாயிலில் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார் புருட மகரிஷி. மகரிஷியின் தவத்தைக் கலைக்க விரும்பாத துங்கதன் பர்ணசாலையின் உள்ளே தெரிந்த குடிலுக்குள் நுழைந்தான். அங்கே பேடியையும் மோகவசப்படுத்தும் பேரழகி ஒருத்தி உறங்கிக்கொண்டிருந்தாள். தன்வசமிழந்தான் துங்கதன், அவன் தொட்டதும் கண்விழித்தாள் காரிகை. இதற்காகவே காத்திருந்தது போல பூரண ஒத்துழைப்புத் தந்தாள். “போய் வருகிறேன் ரிஷி புத்திரி”, துங்கதனின் வார்த்தைகளைக் கேட்டதும் அவள் மூர்ச்சையானாள்.

விஷயம் புருட மகரிஷிக்குத் தெரிந்தால் அவரது சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால் ஓசைபடாமல் குதிரையை பத்து யோஜனை தூரம் நடத்திக்கொண்டு சென்று அங்கிருந்து குதிரையில் ஏறித் தப்பினான். சில நாழிகை கழித்து குடிலுக்குள் வந்த மகரிஷி, அங்கே மூர்ச்சித்துக் கிடந்த தன் மனைவி அமுதகோசலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

 

4

இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பிரதமர் குருமோஹன் சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் சாயாவதி தலைமையில் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்திருந்தனர் மூண்றாவது குழுவினர். கடைசி மூண்று மணிநேர நிலவரப்படி 252 எம்.பி.க்கள் பிரதமரை ஆதரித்துக் கடிதம் கொடுத்திருந்தனர். பெரும்பாண்மைக்கு இன்னும் பதினேழு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பணம், அமைச்சர் பதவி என்று எத்தகைய ஆசை காட்டியும் எவரும் மசிவதாக இல்லை. எட்டு மணிநேரத்துக்கும் மேல் தொடர்ந்த விவாதம் குருமோஹன் சிங்கின் உரையுடன் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் வாக்கெடுப்பு தொடங்குவதாக அறிவித்தார். அப்போது எவரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருபத்தி ஆறு எம்.பி.க்கள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

”கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை உண்டு” பத்திரிகையாலர்களிடம் சொல்லிவிட்டு காரில் ஏறினார் எதிர்க்கட்சித் தலைவர் சத்வாரி. சத்துவாரியின் வீட்டில் தொழிலதிபர் ரொமேஷ் தத்தா நிம்மதியில்லாமல் காத்திருந்தார். காரை விட்டு இறங்கிய சத்வாரி ”கவலைப்படாதிங்க தத்தா, நாம பவருக்கு வந்தாலும் அந்த அக்ரிமெண்ட்ட சைன் பண்ணவேண்டியிருக்கும். அத அவங்களே சைன் பண்ணி ஜனங்களோட அதிருப்திய சம்பாதிச்சுக்கட்டுமேன்னு தான் நம்ம ஆளுங்களையே அவங்களுக்கு ஓட்டுப் போட வைச்சேன். மிஸ்டர் தத்தா, இது தான் அரசியல். அவங்க ஒவ்வொருத்தருக்கும் தலைக்கு 40 கோடி ரூபா அனுப்பி வைச்சிருங்க” என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.

 

5 

அசிஸ்டெண்ட் கமிஷனர் நெல்சன் வெகுநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று அன்று கைகூட இருக்கிறது. தென் சென்னையைக் கதறடித்துக்கொண்டிருக்கும் தாதா டுமீங்குப்பம் ஜெயமணிக்கு நாள் குறித்துவிட்டது சென்னை காவல் துறை. ஜெயமணி என்கவுன்ட்டரை வழிநடத்தும் பொறுப்பு நெல்சனுக்கு வழங்கப்பட்டிருந்தது. என்கவுன்ட்டருக்காக நெல்சன் தேர்ந்தெடுத்திருந்த இடம் சாந்தோம்-கச்சேரி ரோடு சந்திப்பு. மஃப்டியில் நின்ற காவலர்களைக் கவனித்தபடியே கச்சேரி ரோடு தபால் நிலையத்தினுள் காத்திருந்த நெல்சனுக்கு ஜெயமணியின் வாகனம் வந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லப்பட்டது. துப்பாக்கியுடன் அவரும் மற்ற காவலர்களுடன் கலந்துகொண்டார். ஆறு குண்டுகள் பாய்ந்து ஜெயமணி கீழே சாய்ந்தான்.

டிஜிபி பழனிவேல் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “பொதுமக்கள் இனிமே நிம்மதியா இருக்கலாம். ஜெயமணி சகாப்தத்துக்குக் காவல் துறை முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆனா நடந்த என்கவுன்ட்டர்ல துரதிருஷ்ட வசமா ஏசி நெல்சன இழந்துட்டோம். ரொம்ப நேர்மையான அதிகாரி. அவரோட மரணம் காவல் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரோட சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப் போயிட்டிருக்கேன். நாம இன்னொரு சந்தர்பத்தில சந்திக்கலாம், நன்றி” சொல்லி முடித்தவர் தன்னுடைய காரை நோக்கி நடந்தார்.

அன்றைய இரவு டிஜிபியின் அறையில் “வெல்டன் ரகுநாதன், நம்ம சைடுல உயிரிழப்பு இல்லைன்னா நாம பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும். இதுக்கு முன்னாடி பேசின்பிரிட்ஜ் ராஜா என்கவுன்டருக்காக ஹ்யூமன் ரைட்ஸ்காரங்க நமக்கு எவ்வளவு கொடைச்சல் குடுத்தாங்கன்னு உங்களுக்கே தெரியும். இந்த அசைன்மெண்ட்ட ரொம்ப சரியா செஞ்சு முடிச்சிட்டீங்க. உங்க ப்ரமோஷனுக்கு நான் பொறுப்பு,” சொல்லி முடித்த டிஜிபிக்கு விறைப்பான சல்யூட் ஒன்றைத் தந்துவிட்டு விடைபெற்றார் டெபுடி கமிஷனர் ரகு.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.