மம்மியைக் கண்டு பம்மிய குறிப்புகள் – 1

11:01 முப இல் ஜனவரி 29, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: , ,

image

போர் நேரத்துல உயிரிழப்புகள் சகஜம்ங்கற அரிய கண்டுபிடிப்ப எங்களுக்கெல்லாம் தெரிய வைச்சிட்டீங்க. அப்படியே இந்த காங்கிரஸ்காரங்க கிட்ட இந்தியாவுல அரசியல் படுகொலைகளும் சகஜம்னு (ஒலகம் பூராவுமே சகஜம் தான்) சொல்லிடுங்களேன்!

ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்

10:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: ,

இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

clip_image002

வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.

image

பகிரங்கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

image

இதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.

image

ஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.

image

பெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.

image

உலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

டிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.

நாளை சந்திப்போமா…

வலைச்சரத்தில் விஜய்கோபால்சாமி

1:02 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: ,

வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2). நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.

image

அது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது விஜய்கோபால்சாமி வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

என்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண்பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.

அதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.

அதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.

விடைபெறும் நேரம்

12:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக
குறிச்சொற்கள்: , ,

image

என் இனிய வலையுலகமே…

உங்கள் பாசத்துக்குரிய

விஜய்கோபால்சாமியின்

மொக்கைகளை

பொறுமையாகச்

சகித்துக்கொண்ட

உங்கள் சகிப்புத் தன்மைக்கு

நன்றி சொல்லி

விடை பெறுகிறேன்

அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

உஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.

தம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன?” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூயா அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) அக்கா என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.

கவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது சிறுகதைகள்தான். அவருடைய கதைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).

வருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ…டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..?” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.

கேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.

லதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.

இளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறுங்கவிதைகள்.

பதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது பூ படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலையும் இணைத்துள்ளேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.

நாளை சந்திப்போமா…

அய்யோ… போச்சே…

8:24 பிப இல் ஜனவரி 9, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்:

பின்னூட்டங்கள் எழுதுவதற்காகவும், அவ்வப்போது பதிவுகள் எழுதுவதற்காகவும் நான் துவங்கிய ப்ளாகர் கணக்கு தற்போது களவாடப்பட்டுள்ளதோ என்று ஐயப்படுகிறேன். ஏனெனில் தளத்தின் வடிவமைப்பில் நான் செய்யாத மாறுதல்கள் சில உள்ளன. ஹிட் கவுண்ட்டர் உள்ளிட்ட விட்ஜெட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் முன்பு என்னுடைய கடவுச்சொல்லை உள்ளிட்ட போது சரியாக இருந்தது. இன்று பின்னூட்டம் எழுதுவதற்காக லாகின் செய்தபோது உள்ளே செல்லமுடியவில்லை.

ஆகவே வலை நண்பர்களே, கீழ்கண்ட தளத்திலிருந்து வரும் பின்னூட்டங்களை தயை கூர்ந்து பதிப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

http://vgswami.blogspot.com/

அந்தப் புண்ணியவான் யாராயிருந்தாலும் அவருக்கும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன்.

“நல்லா இருடே”

கூடிய சீக்கிரம் புதுக் கணக்கு தொடங்கிய பிறகு தெரிவிக்கிறேன். தவறாமல் ஆதரவு தரவும்.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.