கொலை வெறிக் கவிதைகள் – 6
6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: குடை, பள்ளிக் காலம், பிரிவு, மழை
நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.
உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.
வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.
நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…
என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.
என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…
வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…
வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…
அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.