தேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….
8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கேள்விகள், தொடர், பதில்கள், லதானந்த்
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
விஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீதுள்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
முதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
யாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
தயிர்சாதமும் மிளகாய் ஊறுகாயும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
தங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
சென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
ஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…
14. பிடித்த மணம்?
ஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
சேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.
இந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறையில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.
அ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
ஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.
இ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.
ஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
உ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
ஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.
எ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.
17. பிடித்த விளையாட்டு?
கபடி, சிலம்பம்.
18. கண்ணாடி அணிபவரா?
ஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
விரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
இந்திரா (தெலுங்கு).
20. பிடித்த பருவ காலம் எது?
கார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்!
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
இரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?
வீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அடுத்தவர்களை நோகடிப்பதை.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எதிரி பொறாமைப்படும் படி.
31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.
நன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.