கொலை வெறிக் கவிதைகள் 1754 – 1

11:49 பிப இல் ஜூன் 22, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 17 பின்னூட்டங்கள்

உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போலவே
இயல்பாகிவிட்டது,
உன்னை நினைத்துக் கொள்வதும்…

நீ கேட்காமலே
பேருந்து நிறுத்தம் வரை
துணைக்கு வந்தது…

பத்திரமாய்
சென்று சேர்ந்தாயா என்று
தொலைபேசியில் சோதித்தது…

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில் நான்
மயங்கி விழுந்தது கண்டு
நீ பதறித் தவித்தது…

இரவுப் பணியில் ஒருநாள்
கால் இடறி
நடக்கமுடியாமல் போனதற்காக
எனக்கிருந்த பசியறிந்து
பழங்களுடன் நீ வந்தது…

தொடர்ந்த என் நினைவுகளை
சட்டென்று அறுத்தது,
பில்ட்டரை நெருங்கிய
சிகரெட்டின் நெருப்பு,
நாம் பிரிந்த
ஜனவரி பதினொன்று
நினைவுக்கு வந்தபோது.

ப்ளாகரில் கொலை வெறிக் கவுஜை எழுதுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். வேர்ட் பிரஸ்சில் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்குக் கூட யாரும் இல்லை என்பதால் (சேவியர், உமா, போன்றோர் எழுதுவது கொலைவெறிக் கவிதைகளில் சேராது, அடித்துச் சொல்லுவேன்), அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதத் துவங்கியிருக்கிறேன்.

பின்னவீனத்துவம் பற்றி பலரும் பேசிக் கொண்டிருப்பதால், அதிலும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தலைப்பு வைப்பது பின்னவீனத்துவத்தின் அடையாளம் என்று சொன்னதால் ”கொலைவெறிக் கவிதைகள் 1754” என்று தலைப்பு கொடுத்துள்ளேன். 1431 பயோரியா பல்பொடி மாதிரி அது என்ன 1754 என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். 1754 ஐக் கூட்டினால் 8 வரும். 8 ராசியில்லாத எண் என்று பலராலும் சொல்லப் படுவதால் அந்த பப்ளிக் செண்டிமெண்ட்டை கட்டுடைக்க (கவனிக்க, இது ஒரு பின்னவீனத்துவ வார்த்தை) கூட்டுத் தொகை 8 வருவது போன்றதொரு எண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

ஒருவேளை என்னுடைய வாழ்நாளில் 1754 கவிதைகளை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று அவதானித்தபோது (இதுவும் பி.ந. வார்த்தை என்றார்கள்), அதை அடுத்து “கவிதைக் கட்டுடைப்பு அல்லது பின்னவீனத்துவக் கவிதைக் கலாட்டா 12347” என்ற தலைப்பில் இதே வேலையைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். 12347 ஐக் கூட்டினாலும் 8 வரும். ஒருவேளை 12347 கவிதைகள் எழுதித் தீர்த்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், பதினாறு இலக்கத்தில் கூட்டுத் தொகை 8 வருவது போன்ற ஒரு எண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் கட்டுடைப்பு தொடரும்.

இதற்கு இன்னொரு நோக்கமும் இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களின் மக்கள் தொகை குறைந்துவிடக் கூடாதே என்கிற சீரிய சிந்தனை தான் அது. அப்படி அவர்களுடைய மக்கள் தொகை குறைவதாகத் தோண்றினால் சாதரண மக்களை விளிம்பு நிலைக்குக் கொண்டு வரும் மகத்தான சேவையைச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டிருப்பது தான் இந்தக் கவிதைத் தொடர். விளிம்பு நிலை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் லதானந்த் அங்கிளின் பதிவைப் பார்க்கவும்.

17 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. கவிதை சோக்காக்கீது. ஆனாக்க...... அந்த பின்னவீனத்துவ பின்னிணைப்பு தான் கொலவெறித்தனமா இருக்கு.......... ரூம் போட்டு ரோசிக்கறாங்கப்பா.....

  2. கடுகு அண்ணா, ஏது கொஞ்ச நாளா ஆளையே காணும். புதிய தளம் ரெடி ஆயிடுச்சா?

  3. கவிதையில் சில உண்மை தடையங்கள் ஊமையாய் சொல்கிறது உன் மனதின் பாரத்தை…

    அழுத்தமான கவிதை தான் சித்தப்பு…

    கலக்குங்க…

  4. அழகான வரிகள்.
    உங்களுக்கு சிகரெட்..அவளுக்கு?
    காதலின் அவஸ்தைகள் காதலனுக்கு மட்டும்தானா?
    பிரிவின் சோகம் கவிதையை வாசித்துமுடிக்கையில் நெஞ்சில் படிகிறது. 🙂

    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..!

  5. கொன்னுட்டீங்க.

  6. வாழ்வின்..கிழிக்கமுடியாத..நாட்களை..கிழிக்குமோ..நெருப்புச்சுருள்..

  7. என்ன கொடுமை சார் இது. யாருமே என்னுடைய பின் நவீனத்துவக் கொலைவெறியைப் பத்தி சொல்லவே இல்ல (கடுகு அண்ணனைத் தவிர).

  8. //என்ன கொடுமை சார் இது. யாருமே என்னுடைய பின் நவீனத்துவக் கொலைவெறியைப் பத்தி சொல்லவே இல்ல (கடுகு அண்ணனைத் தவிர)//

    நவீனத்துவக் கொலைவெறி என்றால் என்ன. அத முதல்ல சொல்லுங்க

  9. ஆஹா.. கவிதை நல்லா இருக்கு விஜய். அதென்ன ஜனவரி 11 ? வருடத்தைச் சொல்லவே இல்லையே ?

    //அந்த பப்ளிக் செண்டிமெண்ட்டை கட்டுடைக்க (கவனிக்க, இது ஒரு பின்னவீனத்துவ வார்த்தை) //

    🙂 உங்க பின் குறிப்பு சுவாரஸ்யமா இருக்கு. குறிப்பா அதில் இழையோடும் நகைச்சுவை. விக்கிரமாதித்யனும் நடிக்க போயிட்டதால உங்களுக்கு பிரச்சனை இல்லை 😉

  10. தேடிப் போய் ரெண்டு பேர வம்புக்கு இழுத்திருக்கேன். சம்மந்தப்பட்ட ரெண்டு பேருமே (சேவியர், உமா) என்னப் பாராட்டிட்டுப் போயிருக்காங்க. என்ன கொடுமை சார் இது? பெரிய கான்ட்ரவர்சீ ஆகி ஜெயமோஹன் சாரு நிவேதிதா ரேஞ்சுக்கு ரத்தக் களறி ஆகும்னு நெனச்சா புஸ்சுன்னு போயிருச்சு…

  11. //– உறங்குவதும்
    உறங்கி விழிப்பதும் போலவே
    இயல்பாகிவிட்டது,
    உன்னை நினைத்துக் கொள்வதும்… —///

    {ஆஹா…உக்காந்து யோசிப்பாங்களோ?}

    கவிதை நல்லாயிருக்குது….

  12. எதனோடும் அல்லது யாரோடும் சமரசம் செய்து கொள்ளாத உங்களது கறாரான எழுத்துக்கள் வாசிப்பானுபவ வெளியில் அலைந்து திரியும் சராசரிகளுக்கு மனவெழுச்சியையும் கொண்டாட்டத்தையும் பகடியையும் அதனூடே இழையோடும் பேரானந்தக் கலவையான வேதியியல் மாற்றங்களையும் புரட்டிப் போட்டுப் புறந்தள்ளும் என்பதை நான் அவாதினித்திருக்கிறேன்

  13. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. சந்தோசம். ஆனா ஒன்னு மட்டும் உறுத்துதுங்க மாமா.

    பதிவப் படிச்சா நீங்களே பின்னூட்டம் போட வேண்டியதுதானே, இதுக்காக வண்டிய எடுத்துக்கிட்டு அப்பநாய்கம்பாளையம் வரைக்கும் போய் அ.அ.மு. சாமி ஐயாவப் பாத்து எழுதி வாங்கிகிட்டு வரணுமா?

    இருந்தாலும் அவரு படிக்காம எழுதித் தந்திருக்க மாட்டாருன்னு நம்புறேன். என்னுடைய எழுத்தை அவருக்கும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து நம்ம வீட்டுப் பக்கம் அடிக்கடி வந்து போங்களேன்.

  14. பின்னூட்டங்களுக்கு பதிலூட்டம் எழுத நாளாகிவிட்டது. மன்னிக்கவும்.

    வணக்கம் மாதரசன்,

    உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

    -என்ற குறளிலிருந்தே இக்கவிதையின் தொடக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது.

    சேவியர் அண்ணா,

    என்னை விக்ரமாதித்தனுடன் ஒப்பிட்டுள்ளீர்கள். பரவாயில்லை. அப்படியே இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் எனக்கும் ஒரு சான்சு வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும்.

    ஜெய் அண்ணா,

    நீங்கள் பின்னவீனத்துவம் பற்றி என்னிடம் மாணவனாகச் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். அதற்கான ஆர்வம் உங்கள் மனவெளியில் உலாவிவருவதை உங்களது எழுத்துக்களே கூறுகின்றன.

    விக்னேஷ்வரா,

    என் அந்தரங்கமான ஆத்மார்த்தமான சகஹ்ருதயனாகிவிட்டாய். எதாக இருந்தாலும் ஜி-டாக்கில் கதைக்கலாம். சொந்த விவகாரங்களைப் பின்னூட்டங்களில் குதறக் கூடாது.

    ரிஷான் சாகேபுக்கு தனி மடலில் நன்றி தெரிவித்தாகி விட்டது. மடலில் எழுதியதைப் பொதுவில் அலசுவது மரியாதை அல்ல.

    வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  15. // உறங்குவதும்
    உறங்கி விழிப்பதும் போலவே
    இயல்பாகிவிட்டது,
    உன்னை நினைத்துக் கொள்வதும்…//

    உன்னை நினைத்துக் கொல்வதும்னு அவசரத்துல படிச்சிட்டேன்…. 😉

    நல்லாருக்கு கவிஜ…

  16. எழுதியபோது சொல்ல மறந்த விஷயம்: ஒரு ஐ.டி. நிறுவனத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதியது. (கவுஜை மட்டுமே உண்மைச் சம்பவம்…)

  17. பின் நவினம் – அது சரி – இப்படி கொலை வெறியா வந்திருக்குதா

    பின்னாடி நவினம்னா …

    முன்னாடி என்னங்க …

    (கவிதை நல்லாதானே இருக்கு …)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: