கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…

6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கொடுமை நடந்த இடம் கும்பகோணம்

[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]

கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.

அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.

மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்கு

தமிழ்மணத்தில் எதிர் வாக்கு

தமிழீஷ் வாக்கு

பல்லேலக்கா பல்லேலக்கா – II

4:54 பிப இல் ஜூன் 22, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்
குறிச்சொற்கள்: , , , , , , , ,

உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில். இன்றளவும் நான் பார்த்து வியக்கும் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்று. இந்த கோயிலின் கோபுரத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள் செவ்வக வடிவ அடித்தளத்துடன் உள்ள கோபுரங்களைக் கொண்டிருக்கும். இங்கே கோபுரத்தின் அடித்தளம் சதுர வடிவத்தில் இருக்கும்.

இது தஞ்சைக் கோயிலின் இரண்டாம் தோரண வாயில், முதலாம் தோரண வாயில் பிற்காலத்தில் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அதில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லாததால் அந்தப் படத்தைப் போடவில்லை.

தஞ்சை பெரியகோயிலின் மூண்றாம் தோரண வாயில்.

பெரியகோயிலின் வளர்ப்பு யானை வெள்ளையம்மா. இந்த யானையுடன் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்ட குந்தவை என்ற யானையும் வளர்ந்து வந்தது. உணவு ஒவ்வாமை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு குந்தவை யானை இறந்து போனது. என்னுடைய நண்பர்கள் சிலர் தோற்றத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கொண்டு வெள்ளையம்மாவை என்னுடைய அக்கா என்று கேலி செய்ததும் உண்டு.

இந்தச் சிலையில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு தகவல் ஒளிந்துள்ளது. சிலையின் வலது காலுக்குக் கீழே ஒரு முதலை இருக்கிறது. அதை ஒரு யானை துதிக்கையால் இழுக்கிறது. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்த பாம்பை இந்த வீரன் அடக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு யானையை விழுங்குகிற அளவுள்ள பெரிய பாம்பையே அடக்குகிறான் என்றால் அந்த வீரன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும்? அந்த வீரனின் இரண்டு கைகளையும் பாருங்கள். இடது பக்கம் மேலே உள்ள கை உள்ளே செல்ல வழி காட்டுகிறது. வலது புறம் மேலே உள்ள கை உள்ளே என்னை விடவும் பிரம்மாண்டமான ஒன்று இருக்கிறது என்று வியப்பைக் காட்டும் வகையில் உள்ளதையும் கவனியுங்கள். இந்தத் தகவலை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தனது உடையார் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய கோயிலின் பிரம்மாண்டமான நந்தி. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் மராத்தியர்கள் காலத்தில் வரையப்பட்ட தஞ்சை ஓவியங்கள். நந்திக்குப் பக்கத்தில் அபிஷேகம் செய்வதற்காக பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஏற்றி இறக்கக் கூடிய மேடை. கோயிலைக் கட்டியபோது நந்திக்கு மண்டபம் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் மராத்திய ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபம்தான் இது.

இது புதுச்சேரியில் உள்ள சுன்னாம்பாறு படகுத் துறை.

சுன்னாம்பாறு படகுத் துறையில் மரக் கிளைகளில் அமைக்கப்பட்டிருந்த மரவீடு.

தண்ணீரைக் கிழித்துக்கொண்டு கிளம்புகிறது படகு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தை வீட்டில் விளையாடிய பல்லாங்குழி. இக்கால குழந்தைகளில் எத்தனை பேர் இந்த விளையாட்டை அறிதிருப்பார்கள் என்று தெரியவில்லை.

சென்னை இளைஞர்களின் பாடல் பெற்ற ஸ்தலம், ஸ்பென்சர். இங்குதான் நான் இதற்கு முன்பு பணிபுரிந்த அலுவலகம் இருக்கிறது. சில நாள் எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தம் வரை செல்ல சோம்பல் பட்டு இந்த சிக்னலின் அருகிலேயே காத்திருந்து சிக்னலுக்கு நிற்கும் 21 அல்லது 27-D யில் வீட்டுக்குச் சென்றதுண்டு.

பெருகி ஓடும் கொள்ளிடம் (பொன்னியின் செல்வனில் படித்திருப்பீர்களே, அதே கொள்ளிடம் தான்). கைப்பிடிச் சுவரில் மாலை நேரக் காற்று வாங்கும் பெருசுகள். பேருந்தின் உள்ளிருந்து எடுத்தது.

கொள்ளிடம் பாலத்தில் கண்ட நடுவயதுக் காதல். இந்தக் காட்சியைப் பார்க்கும் போது வாலியின் ஒரு கவிதை ஞாபகம் வந்தது. “நாற்பதில் வரும் காதல் தோற்பதில்லை, முக்கியமாய் இனக் கவர்ச்சியை அது ஏற்பதில்லை”.

”ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” பாடிவிட்டு வந்த இந்த பயணத் தொடரில் இன்னும் ஒரு பதிவு மீதம் இருக்கிறது. விரைவில் அதுவும் வலையேறும்.

தொடை

10:22 பிப இல் மே 20, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 19 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

பதிவுலக நண்பர்களால் பெரிதும் பிறழ உணரப்பட்ட பதிவன் என்ற வேதனை என் இதயத்தை முள்ளாய்த் தைத்துக்கொண்டிருக்கிறது. சமூகத்தின் சிந்தனை ஓட்டம் ஒருவாறாக இருக்க எனக்கு மட்டும் வேறு விதமாகவே தோண்றுகிறது. இது இயல்பான ஒன்றா, குணப்படுத்த முடியாத மனநோயா, என்னவென்றே தெரியவில்லை. உண்மையான அக்கறை உள்ளவர்கள் நல்ல ஆலோசணைகளை பின்னூட்டங்களாக வழங்கலாம். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

என் அன்புக்குரிய உளவியலாளர் மருத்துவர் மாத்ருபூதம் அவர்களும் இறைவனடி சேர்ந்துவிட்டார். புதிரா புனிதமா என்று பிரித்து மேய்ந்து கொண்டிருந்த சகோதரி ஷர்மிளாவும் இப்போது தேன்மொழியாள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கப் போய்விட்டார். யாராவது டாக்டர் ஷாலினியை சந்திக்க நேரம் வாங்கித் தந்தாலோ, கட்டணம் செலுத்த சில ஆயிரங்களை அள்ளி வழங்கினாலோ மிகப் பெரிய உபகாரம் என்று கருதுவேன்.

இந்த உபகாரங்களை எனக்குச் செய்துதரும் தகுதியுள்ள எவராவது இருந்தால் அவர்களது பெயரை பின்னூட்டம் வழியாகத் தெரிவிக்கவும். கஞ்சத்தனமாகச் சீட்டுக் கவியெழுதி அவர்களை அசிங்கப்படுத்த மாட்டேன், தாராளமாக ஒரு குயர் நோட்டுக் கவியே எழுதுவேன்.

சரி இப்போது எனது பிரச்சனைக்கு வருகிறேன். சாதாரணமாக ”தொடை” என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் யாருடைய ஞாபகம் வரும்? ”தொடை” என்று சொன்னால் நீங்களெல்லாம் உள்ளத்தை அள்ளிப் போகக் கூடிய அந்த நடிகையின் நினைவில் பரவச நிலையின் உச்சத்திற்கே போவீர்களில்லையா? ஆனால் அந்த நடிகை என் நினைவுக்கு வரவில்லை. சத்தியமா… நம்புங்க… அய்யோ, நம்புங்களேன்.

”யாரு நெனப்புதாண்டா வந்துச்சு உனக்கு” என்று நீங்கள் நற நறப்பது புரிகிறது. சொன்னால் தவறாகக் கருதிவிடக் கூடாது. பி.காம் முதலாண்டில் எனக்கு தமிழ்ப் பாடம் நடத்திய விரிவுரையாளர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஆம்பளையாக இருந்திருந்தால் அடுத்த நாளே மறந்திருப்பேன். பெண் விரிவுரையாளர் என்பதுதான் பல நாட்கள் என்னை வெட்கத்தில் கூசிக் குறுக வைத்தது.

”அட நாயே, அப்படி என்னதாண்டா நடந்தது” என்று கேட்கிறீர்களா? உங்கள் நியாயமான அவசரம் புரிகிறது. நானும் அதைத்தான் சொல்ல வருகிறேன், பொறுமை, பொறுமை. தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாக கையாளும் அதே கொசுவர்த்திச் சுருள் உத்தியைப் பயன்படுத்தி உங்களை எனது கல்லூரிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

அது தஞ்சாவூரின் பிரபலமான கல்லூரி. கல்லூரி என்றாலும் மானவர்களுக்கு வாராவாரம் தேர்வு நடத்திப் பள்ளிச் சூழலிலேயே மாணவர்களை வைத்திருக்கும் கல்லூரி அது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுழற்ச்சி முறையில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு நடத்தப்படும். அந்த சனிக்கிழமை சனியனை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்த வெள்ளிக்கிழமைகள் ஏராளம்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாராந்திரத் தேர்வுகளில் அதுவே கடைசித் தமிழ்த் தேர்வு. ஒரே ஒரு ஒரு-மதிப்பெண் வினாவால் ஐம்பதிற்கு நாற்பத்திமூன்று மதிப்பெண் எடுத்தும் எனது பெயர் கெட்டதுதான் மிச்சம். எனது நடத்தையை சந்தேகத்திற்குரியதாக மாற்றிய அந்த ஒரு கேள்வி நினைவுக்கு வரும் நாட்களில் இப்போதுகூட என்னால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. இப்பதிவை எழுதி முடித்துவிட்டு உறங்கவேண்டும். அப்போதுதான் காலை ஐந்து மணிக்கு அலுவலகம் கிளம்ப முடியும். ஆனால் இன்று இரவு நான் உறங்குவது சந்தேகமே.

”அட சனியனே அந்த எளவெடுத்தக் கேள்வி என்னன்னு சொல்லித் தொலைடா” என்ற கொலைவெறிக் கூச்சல் காதுகளில் விழுகிறது. சொல்கிறேன் என் அவமான வரலாற்றை, கேளுங்கள். தொடை என்பது என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. வணிகவியல் மாணவனிடம் எதற்க்கு விலங்கியல் பாடத்திலிருந்து கேள்வி கேட்டார்கள் அதுவும் தமிழ்த் தேர்வில் என்ற குழப்பம் என்னை சுழற்றியடித்தது. பக்கத்திலிருந்தவனிடமிருந்து கேள்வித் தாளைப் பிடுங்கிப் பார்த்தபோது அவனுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐயகோ.

மற்ற கேள்விகளுக்கு விடையளித்துவிட்டுக் கடைசிப் பத்து நிமிடத்தில் விடைத்தாளைச் சோதித்ததில் மீண்டும் தொடையிலேயே வந்து முட்டியது. நான் கேள்வியைச் சொன்னேன், மனவக்கிரமுள்ளவர்களின் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்வது எனது வேலையல்ல. தொடர்ந்து கேளுங்கள். மீண்டும் மீண்டும் யோசித்ததில் அது ஒரு உறுப்பு என்கிற தெளிவு பிறந்தது. அந்த தெளிவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, உடலின் உறுப்பு என்று விடையெழுதி அறைக் கண்கானிப்பாளரிடம் விடைத்தாளை வழங்கினேன்.

சரியாக ஐந்தாவது நாள் விடைத்தாள்களுடன் அந்தப் பெண் விரிவுரையாளர் எங்கள் வகுப்புக்கு வந்தார். வரிசை எண் படி எனது விடைத்தாள்தான் முதலில் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. எல்லாருடைய விடைத்தாளும் வழங்கப்பட்ட பிறகு எனது பெயர் அழைக்கப்பட்டது. ஒருவேளை நான் எல்லோரையும் விட அதிக மதிப்பெண்கள் வாங்கியதற்காக என்னை சிறப்பாக கவனிப்பார்களோ என்ற எதிர்பார்ப்புடன் எழுந்து நின்றேன்.

என் எதிர்பார்ப்பிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடுமளவுக்கு ஒரு புயலடித்தது. தொடை குறித்து நான் அளித்த விடை தவறு என்றும், ஒரு பெண்ணான அவரை இழிவுபடுத்தும் விதமாகவே நான் அவ்வாறு எழுதியதாகவும் என்னைத் தாளித்துப் பொறித்துவிட்டார். அந்தப் புயல் ஓய்ந்த போது தமிழ்ப் பாடவேளை முடிந்ததன் அறிகுறியாக மணியடித்தது. விடைத்தாளைப் புரட்டியபோது உடலின் உறுப்பு என்ற விடைக்கு அரை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. ஆக இது தவறான விடையுமில்லை. பிறகு எதுதான் சரியான விடை கோணாரைப் புரட்டியபோது (நான் புரட்டியது கோணார் தமிழுரை. மறுபடியும் சொல்கிறேன், வக்கிரம் பிடித்தவர்களின் கற்பனைக்கு நான் பொறுப்பல்ல) அதே கேள்விக்கான விடையாக “செய்யுள் உறுப்பு” என்று இருந்தது.

அத்துடன் முதலாம் ஆண்டு முடிந்தது. இரண்டாம் ஆண்டில் எங்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் ஒரு ஆண் விரிவுரையாளர். மூண்றாம் ஆண்டில் மொழிப்பாடங்கள் கிடையாது. அதனால் அந்த பெண் விரிவுரையாளரை மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் இல்லை. இரண்டாமாண்டில் தமிழ் விரிவுரையாளரிடம் பந்தயம் கட்டி எண்பது மதிப்பெண்கள் எடுத்தது, தொடர்ந்து இரண்டு முறை தமிழில் எழுபத்தைந்து மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியது, இதெல்லாம் அந்த பெண் விரிவுரையாளருக்கு தெரியாமலே போய்விட்டது.

சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் இன்னும் அங்கே வேலை பார்ப்பதாகக் கேள்வி. அதனால் அங்கே செல்வதைத் தவிர்த்தே வருகிறேன். தவிர்க்க முடியாமல் பட்டமளிப்பு விழாவுக்காக மட்டும் அந்தக் கல்லூரிக்குள் மீண்டும் காலை வைத்தேன். நல்ல வேளை, அந்த விரிவுரையாளர் கண்ணில் படாமல் வீடுவந்து சேர்ந்தேன்.

எனது கல்லூரி மீது எனக்கு எப்போதுமே அபிமானம் உண்டு. அந்தக் கல்லூரியால் பல துன்பங்களுக்கு ஆளானபோதும், நான் ஆளானபோது படித்த கல்லூரியல்லவா…. இருக்காதா பின்னே…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.