ஊடகப் பொறுப்பின்மை

4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

imageவிஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன?” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.

இதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.

ஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.

செய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.

சந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம்? என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிழீஷில் வாக்களிக்க

பார்த்தேன், சிந்தித்தேன் – I

3:25 பிப இல் ஜூலை 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் இன்று விளம்பரங்கள் உள்பட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தேன்.

 

இன்றைய நிகழ்ச்சியில் திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளைக் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் நான் மிகவும் ரசித்தது “தாலி தேவையா தேவையில்லையா?” என்ற பகுதி. ஒரு பெண் திருமணமாகி ஏழாண்டுகளாக நான் தாலி அணிவதில்லை என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதற்கு அவர் கூறி காரணமும் ஏற்கத்தக்கதாக இருந்தது. கணவனை ஆத்ம ஸ்நேகிதனாகக் கருதுகிற எனக்கு தாலி என்பது வெறும் அலங்கார ஆபரணம் தான் என்று கூறினார்.

 

உயிரோடு கண் முன்னே இருக்கிற கணவனை விட ஒரு துண்டு தங்கம் எனக்குப் பெரிய விஷயமில்லை என்று ஒரு விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறிய அவரது துணிச்சல் பாராட்டத் தக்கது. பழங்காலத்தில் பெண்ணைப் போலவே ஆணுக்கும் திருமணமானதன் அடையாளமாக பெண்கள் அணியும் மெட்டி போன்ற ஆபரணம் ஒன்று அணிவிக்கப்பட்டது. அதில் மெல்லிய ஒலி எழுப்பக் கூடிய சலங்கைகளும் இருக்கும். அவனை நம்பி ஒரு குடும்பம் இருப்பதால் அவன் உயிர் வாழ்வது மிகவும் அவசியமாக இருந்தது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அவன் நடந்து வரும் வழியில் அந்த ஆபரணத்தின் ஒலியைக் கேட்டு விலகிப் போகும் என்பதால் ஆணுக்கும் அந்த ஆபரணம் அணிவிக்கப்பட்டது. இந்த ஆபரணம் இன்றளவும் சில ஜாதியாருடைய திருமணங்களில் அணிவிக்கப்பட்டாலும், திருமணம் முடிந்த இரண்டொரு நாளில் அந்த மணமகன்கள் அதை கழற்றிவிடுகின்றனர்.

 

திருமணமானவன் என்ற அடையாளத்தை மறைப்பதற்காக அல்லது தங்களுடைய வசதிக்காக ஆண்கள் இந்த ஆபரணத்தைக் கைவிட்டதை ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஏன் ஒரு பெண் அதைச் செய்யும் போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது? அதே நிகழ்ச்சியில் “நீங்கள் மணமாகதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் உங்களை அணுக மாட்டார்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள் எதிரணியினர். அந்தப் பெண் அதற்கும் அருமையாகப் பதிலளித்தார். “ஆண்களுக்குத் திருமணமானவர் என்பதற்கான விசேஷ அடையாளங்கள் ஏதும் இல்லாத போது அவர்கள் மட்டும் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்கிறார்கள்?” என்று கேட்டு அவர்களை மடக்கினார்.

 

இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட அந்தக் கன்சர்வேட்டிவ்கள், கணவன் இறந்த பிறகு பலவந்தமாக தாலி அகற்றப்பட்டக் கைம்பெண்களையும் திருமணமாகாதவர் என்று நினைத்து மற்ற ஆண்கள் அணுகுகிற அபாயம் இருக்கிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? இதே அபாயங்களைத் தவிர்க்க ஒரு கைம்பெண் தன்னுடைய கணவன் கட்டிய தாலியை அகற்றாமல் வைத்திருந்தால் அதை மட்டும் ஏன் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிய குற்றமாகக் காட்டுகிறது இந்தக் கன்சர்வேட்டிவ் கூட்டம்.

 

மாப்பிள்ளை அழைப்பைக் குறித்து தங்களுக்கு இருந்த சங்கடங்களை சில இளைஞர்கள் வெளிப்படுத்திய போது ஒரு கண்சர்வேடிவ் பெண்மணி திருமணத்துக்கு வர முடியாதவர்கள், உதாரணமாக கைம்பெண்கள் உள்ளிட்டோர் அந்த மணமகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வைக்கப்படுவது தான் மாப்பிள்ளை அழைப்பு என்று ஒரு சப்பைக்கட்டு சமாதானத்தைச் சொன்னார். இதற்கு கோபி எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தக்கது. கைம்பெண்கள் மறைந்து நின்று தான் பார்க்க வேண்டுமா, ஏன் அந்தத் திருமண அரங்கத்துக்கே வந்து பார்க்கக் கூடாதா? என்று கேட்டார். அதற்கு கன்சர்வேடிவ்கள் பக்கமிருந்த ஒருவர், சடங்குகளிலும் விலக்கத் தக்கவை உண்டு, அதில் இதுவும் ஒன்று என்று ஒப்புக் கொண்டார்.

 

அந்த நிகழ்ச்சியில் ஒரு கைம்பெண்ணும் கலந்து கொண்டார். கணவனைப் பறிகொடுத்த ஒரே காரணத்துக்காக பல விசேஷங்களில் சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி ஒதுக்கப் படுவதைக் கூறினார். கன்சர்வேட்டிவ்களின் பக்கமிருந்து ஒரு பெண் தன்னுடைய திருமணத்தில் மற்றவர்கள் செய்யக் கூடிய சடங்குகளை அந்தக் கைம்பெண்ணையும் அழைத்து செய்ய வைப்பேன் என்று கூறினார். வரவேற்போம்.

 

நிகழ்ச்சியின் இரண்டாம் பாதியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியன் என்பவர் கன்சர்வேடிவ்களின் பக்கம் சிறப்புப் பங்கேற்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். பல பேரைப் போல கோபியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கலாச்சாரக் காவலர்களில் கூடாரம் என்று கருதிவிட்டார் போலிருக்கிறது.

 

கோபி கடைசியாய் சொன்ன பஞ்ச் மிகவும் நன்றாக இருந்தது, “வெறும் சடங்குகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதை விட, மனிதர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வதல்லவா வாழ்க்கை”. நிஜம் தானே!

பிள்ளைகளிடம் பாரபட்சம்… காட்டப்படுகிறதா இல்லையா?

10:12 பிப இல் மே 11, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா இல்லையா? கடந்த இரு வாரங்களாக விஜய் டிவி நீயா நானா? வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு இது.

இதைக்குறித்து நான் எதுவும் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களின் வாயிலாக இப்பதிவைப் படிக்கப் போகிறவர்கள்தான் எழுத வேண்டும். இப்பதிவிற்கு பின்னூட்டம் அளிக்க சகபதிவர்கள் சிலருக்கு அழைப்பும் அனுப்ப உள்ளேன். தற்செயலாக வரக்கூடிய வாசகர்களும் பின்னூட்டமிடலாம்.

உங்கள் குடும்பத்திலோ, நீங்கள் பார்த்த குடும்பங்களிலோ நிகழ்ந்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். அவை எத்தகைய பாரபட்சங்கள் அல்லது அந்த பாரபட்சம் உங்களிடம் அல்லது நீங்கள் பார்த்தவர்களிடம் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கியது போன்றவற்றையும் எழுதலாம்.

எங்கே கொட்டுவது என்று தெரியாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு இது கூட ஒரு வடிகாலாக அமையலாம். உங்கள் அடையாளத்தை வெளிக்காட்ட விருப்பமில்லையெனில் உங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு கூட கொட்டிவிட்டுப் போகலாம்.

வாருங்கள். தவறாமல் எழுதுங்கள். இங்கே நீங்கள் இறக்கி வைப்பது உங்கள் மனதை அழுத்துகிற சுமையாகக் கூட இருக்கலாம்.

எங்கே போகுது தமிழ் பேச்சு

10:40 முப இல் ஏப்ரல் 8, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சிக்கான அறிவிப்பைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு இளைஞர்களின் பேச்சாற்றலுக்கான மிகச்சிறந்த களமாக இருக்கும் என்று பலராலும் கருதப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சி இப்போது வெறும் இராமாயண உபன்யாசமாகவும் மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

நிகழ்ச்சிக்கான இரண்டு நடுவர்களில் காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணனும் ஒருவர். நெல்லைக் கண்ணனின் தொடர் நடவடிக்கைகளால் பிறந்தது தான் மேற்கண்ட அச்சம்.

பட்டிமன்றங்களில் மட்டுமே சிறப்பாக எடுபடக் கூடிய நெல்லைக் கண்ணனின் பாணி இது போன்ற ரியாலிடி நிகழ்ச்சிகளுக்கு ஒத்தே வராது. நெல்லைக் கண்ணன் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். முடியாவிட்டால் கௌரவமாக நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடலாம். இல்லையெனில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவுக்கும் பிருத்விராஜுக்கும் நிகழ்ந்தது போன்ற ரசாபாசம் இந்த நிகழ்ச்சியிலும் நடக்கலாம்.

பங்கேற்க வந்த பேச்சாளர்களை விடவும் நெல்லைக் கண்ணன் தான் அதிகமாகப் பேசுகிறார். பங்கேற்க வந்தவர்களைப் போலவே சகநடுவரையும் பேசவிடுவதில்லை. என்ன காரணமோ போன வாரம் நடுவராக வந்திருந்த கவிஞர் அறிவுமதியைக் காணவில்லை.

பங்கேற்க வந்த ஒரு இளைஞர் பாரதியாரின் “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற வரிகளை மேற்கோள் காட்டுகிறார், இவரோ சம்பந்தமே இல்லாமல் ரஷ்யப் புரட்சி பற்றிய பாரதியாரின் கவிதையை ஒப்பிக்கிறார். என்ன தான் சொல்ல வருகிறார் நெல்லைக் கண்ணன், பாரதியார் மேல சொன்ன வரிகளை எழுதவே இல்லை என்கிறாரா?

இன்னோரு இளைஞர் பெரியாரின் தொண்டர்களைப் பேசினால், நெல்லைக் கண்ணனுக்கு உடனே பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. “பெரியாரின் தொண்டர்கள் எத்தனை பேர் அறங்காவலர் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா,” என்கிறார். தேவையா இந்த விஷமம். நெல்லை கண்ணனுக்கு ஒரு செய்தி, பெரியாரே அறங்காவலராக இருந்தவர் தான். என்ன பதவியிலிருந்தார் என்பதல்ல முக்கியம், பதவியைக் கொண்டு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.

“பாரதியாரா, நான் தான் மொத்தக் குத்தகை, ராமாயணமா அதற்கும் நான் தான் மொத்தக் குத்தகை, ஆஸ்திகமா அதற்கும் நான் தான், என் முன்னால் பகுத்தறிவு, சுயமரியாதை பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினாயோ, தொலைந்தாய்” இப்படித்தான் இருக்கிறது நெல்லை கண்ணனின் நடவடிக்கை. முடிந்தால் யாராவது நெல்லை கண்ணனிடம் சொல்லுங்களேன், “இது நெல்லை கண்ணனின் பாண்டித்தியத்தைக் காட்டுகிற இடமல்ல. தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலைக் காட்ட வேண்டிய களம்,” என்று.

நெல்லை கண்ணன் அவர்களே அடக்கம் என்றால் என்ன என்பதை முதலில் கற்றுக் கொண்டு வாருங்கள். யாரிடம் கற்றுக் கொள்வது என்று தெரியாவிட்டால் நான் காட்டுகிறேன் ஒரு சரியான வாத்தியாரை. நீங்கள் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலே தான் அவரும் இருக்கிறார். பெயர் “தமிழருவி மணியன்”.

ஒருவேளை இதெல்லாம் விஜய் டிவி யின் விளம்பர ஸ்டண்ட்டாக இருக்குமோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம் இப்போதெல்லாம் இது ஒரு பழக்கமாகவே மாறி வருகிறது. ரியாலிடி நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றுவதற்கு இது ஒரு நிரூபிக்கப்பட்ட வெற்றி முறையாகவே கருதப்படுகிறது.

டி.ஆர்.பி. வெறி முத்திப் போய் மைக்கை எடுத்து அடித்துக் கொள்ளும் வரை போகாமல் இருந்தால் சரி.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.